AppamAppam - Tamil

டிசம்பர் 14 – கர்த்தரிடத்தில் உறவு!

“ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்” (யாத். 20:21).

யாரெல்லாம் கர்த்தரை அளவில்லாமல் நேசிக்கிறார்களோ, அவர்கள் தேவனுக்கு சமீபமாய்ச் சேருகிறார்கள். நீங்கள் கிருபாசனத்தண்டை தைரியமாய்க் கிட்டிச்சேரும்படிக்கு, உங்களை அழைத்த தேவன் உங்களுக்காக கிருபையின் வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனுஷனுடைய வாழ்க்கையிலும் இரண்டு பகுதிகளுண்டு. ஒன்று வெளியரங்கமான வாழ்க்கை. அடுத்தது உள்ளான அந்தரங்கமான வாழ்க்கை. ஒரு பெரிய மலையின் அடிவாரத்திலுள்ள நிலவரம் வேறு. மலையின் உச்சியிலுள்ள நிலவரம் வேறு. மலையின் அடிவாரத்தில் காட்டு மிருகங்கள் உலாவக்கூடும். சலசலப்புகள் ஏற்படக்கூடும். பறவையினங்கள் சத்தமிட்டுக் கொண்டிருக்கக்கூடும். காற்று பலமாய் வீசக்கூடும்.

ஆனால் மலையின் உச்சியிலோ மகிமையான மேகங்கள் இறங்கிக் கொண்டேயிருக்கும். சூரியனுடைய மென்மையான ஒளி இடைவிடாமல் வீசிக்கொண்டே இருக்கும். பூரண சமாதானமும், பூரண மகிமையும் உடையதாய் விளங்கும். உங்களுடைய வெளியரங்கமான வாழ்க்கையிலே போராட்டங்களும், சஞ்சலங்களும், பாடுகளும் இருந்தாலும், உங்கள் உள்ளமானது மலை உச்சியைப் போல, நீதியின் சூரியனாகிய கர்த்தரோடு உறவாடிக் கொண்டேயிருக்கட்டும்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில், கர்த்தரிடத்தில் தனியாக ஓடிச்சென்று மலை உச்சியின் மகிமையும் மென்மையுமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, வெளியரங்க வாழ்க்கையில் எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் நீங்கள் கலங்குவதில்லை.

மோசே கர்த்தரோடு முகமுகமாய்ப் பேசுகிற ஒரு பக்தனாக இருந்தார். கர்த்தர் சொன்னார், “மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம்” (யாத். 24:2). பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லை என்பதே இதன் காரணம்.

“அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப் பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்” (யாத். 25:22). “மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடார வாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்” (யாத். 33:9).

தேவபிள்ளைகளே, நம்முடைய தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. மோசேயோடு பேசினவர், உங்களோடும் பேசுவார். நீங்கள் உங்களை சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தத்தோடு கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க ஆவலுள்ளவர்களாயிருந்தால் நிச்சயமாகவே கர்த்தர் உங்களோடும் பேசி உறவாடுவார்.

நினைவிற்கு:- “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங். 16:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.