AppamAppam - Tamil

டிசம்பர் 09 – கர்த்தருடைய வல்லமை!

“அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று” (லூக். 5:17).

கர்த்தருடைய சுகமாக்கும் வல்லமை நம்முடைய மத்தியிலே விளங்கும் என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். எல்லா வகையான சுகங்களிலேயும் மிக முக்கியமானது உங்களுடைய ஆத்துமாவிலே கிடைக்கும் சுகமாகும். உங்கள் ஆத்துமா சுகமாய் வாழ்ந்திருக்கும் என்றால், நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகித்திருப்பீர்கள்.

தாவீது ராஜா, “கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும்” (சங். 41:4) என்று சொல்லுகிறார். ஆம். பாவங்களிலிருந்து மனந்திரும்பும்போது, கர்த்தருக்கும் உங்களுக்குமிடையிலே உள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது. அப்போது ஆத்துமாவிலே சந்தோஷமும், தெய்வீக சுகமும் ஏற்படுகிறது.

கர்த்தர் சொல்லுகிறார், “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று” (ஓசி. 14:4). சீர்கேட்டிலிருந்து சுகம் என்று வேதம் சொல்லுவதைப் பாருங்கள். மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகியவற்றில் விழுந்து சீர்கேட்டை நோக்கி ஓடுகிறவர்கள் கர்த்தரண்டைத் திரும்பினால், அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.

இன்னும் யாருக்கு கர்த்தர் சுகத்தைத் தருகிறார்? இருதயம் நருங்குண்டவர்களை அவர் குணமாக்குகிறார் (லூக்கா 4:18). துன்பங்களும், துயரங்களும், தோல்விகளும், துரோகங்களும் இருதயத்தை உடைக்கின்றன. இவை இருதயத்தை நருங்குண்டு, நொறுங்குண்டு போகும்படி செய்கின்றன. உங்கள் நம்பிக்கைக்குரியவர்களே உங்களை ஏமாற்றும்போது மனம் முறிவடைந்து போகிறீர்கள். அந்த நேரத்திலும் கர்த்தரே உங்களைக் குணமாக்க வல்லமையுள்ளவர். அவர் இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கி, சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கி, ஆறுதலையும் சமாதானத்தையும் தந்தருளுகிறார்.

வேதம் முழுவதிலும் சுகத்துக்கான, குணமாக்குதலுக்கான, ஆரோக்கியத்திற்கான வாக்குத்தத்தங்கள் உண்டு. அவர் ஆத்துமாவிலே சுகம் வரப்பண்ணுகிறார். சீர்க்கேட்டிலிருந்து குணமாக்குதலைக் கொண்டு வருகிறார். உடைந்த இருதயங்களைச் சீர்ப்படுத்திக் குணமாக்குகிறார். மட்டுமல்ல, விசாரிப்பாரற்ற, தள்ளுண்டு போகிறவர்களுடைய வாழ்க்கையிலும் ஆரோக்கியத்தைத் தந்தருளுகிறார். அவர் எத்தனை அருமையானவர்! கர்த்தர் சொல்லுகிறார், “இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்” (எரே. 33:6).

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களில், அவரிடத்தில் வந்தவர்களில் ஒருவராகிலும் தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்ளாமல் திரும்பிப் போனதேயில்லை. தேவபிள்ளைகளே, நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்து இன்றைக்கு உங்களுக்கும் விடுதலையையும், தெய்வீக சுகத்தையும் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்” (மத். 4:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.