AppamAppam - Tamil

ஏப்ரல் 14 – தேவதூதர்களும், துதியும்!

“தேவரீர் நீர் பாத்திரராயிருக்கிறீர். ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர்” (வெளி. 5:9).

பரலோகத்தில் தேவதூதர்கள் பாடுகிற பாடல்களுண்டு; மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள் பாடுகிற பாடல்களுமுண்டு. இந்த இரண்டு வகைப்பாடல்களும் இனிமையானவைதான். இவற்றைக்காட்டிலும் இந்த இரண்டு பாடல்களிலும், பூமியிலிருந்து கர்த்தருக்காக மீட்கப்பட்டவர்கள் பாடுகிற பாடலோ, மகா இனிமையானதும், உள்ளத்தைப் பூரிக்கச் செய்கிறதுமாயிருக்கிறது. தேவதூதர்களுக்கு, பாவத்தின் அனுபவமும், மீட்பின் அனுபவமும் இருக்காது. ஆனால் நீங்களோ, உங்களுடைய மீட்புக்காக கிறிஸ்து செய்த மிகப்பெரிய தியாகத்தையும், அதற்குக் கிரயமாக அவர் கொடுத்த விலையேறப்பெற்ற இரத்தத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

பூமியிலிருந்து பரலோகத்திற்குப் போகிற ஒவ்வொரு பரிசுத்தவானுடைய அனுபவங்களும் வித்தியாசமானவை. புதிது புதிதானவை. வேதம் சொல்லுகிறது, “தேவரீர் நீர் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில், நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர். எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்” (வெளி. 5:9,10).

கர்த்தர் தேவதூதர்களிலும் உங்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார். தேவதூதர்களை கர்த்தர் ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கவில்லை. ஆனால், உங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “மகிமையினாலும், கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:5,6).

பெரிய பெரிய தூதர்களையெல்லாம், இரட்சிப்பை சுதந்தரிக்கப்போகிறவர்களுக்கு பணிவிடை ஆவிகளாகக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். இவ்வளவு கிருபை பாராட்டின ஆண்டவர் துதிக்குப் பாத்திரர் அல்லவா? ஆகவே, தாவீது ராஜா சொல்லுகிறார், “கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்” (சங். 48:1). உங்களுடைய சத்துருக்களின் கைகளிலிருந்து நீங்கள் நீங்கலாகி மீட்கப்பட வேண்டுமா? விடுதலையடைய வேண்டுமா? கர்த்தரைத் துதியுங்கள். அப்பொழுது துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிறவர் (சங். 22:3) இறங்கி வந்து உங்களுக்கு விடுதலையைத் தத்தருளுவார்.

தேவபிள்ளைகளே, உங்கள் வீடு இருளாயிருக்கவேண்டிய அவசியமில்லை. ‘யாரோ செய்வினை செய்துவிட்டார்கள். கெட்ட சொப்பனம் வருகிறதே, கெட்ட கனவுகள் வருகிறதே’ என்று கலங்கவேண்டியதில்லை. கர்த்தரை நன்றாகத் துதித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும்போது உங்களுடைய நித்திரை இன்பமாயிருக்கும். நீங்கள் பரலோக தரிசனத்தைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.