No products in the cart.
செப்டம்பர் 30 – சுத்தமாயிருக்கக்கடவது!
“உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக் கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப்போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது” (உபா. 23:14).
உங்கள் வீடு சுத்தமாயும், உங்கள் வாழ்க்கை பரிசுத்தமாயும் இருக்கக்கடவது. ஏனென்றால், கர்த்தர் உங்களுடைய பாளயத்திற்குள்ளே உலாவ விரும்புகிறார். உங்களை விருத்தியாக்கி, ஆசீர்வதிக்க விரும்புகிறார். உங்களுடைய சத்துருக்களை உங்களுக்குக் கீழ்ப்படுத்தி, ஜெயம் கொடுக்க விரும்புகிறார்.
பாளயம் என்றால் எதைக் குறிக்கிறது? குடும்பம், வீடு, வேலை மற்றும் வியாபாரம் ஆகிய அனைத்துமே பாளயத்தைத்தான் குறிக்கும். உங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அதாவது பாளயத்திலும் பரிசுத்தம் இருக்க வேண்டும். கர்த்தர் ஒரு அசுத்தத்தையும் எங்கும் காணக்கூடாது. சிலர், வீட்டில் பரிசுத்தமாய் நடப்பார்கள். வியாபார ஸ்தலத்தில் அசுத்தமான வாழ்க்கையைக் கையாளுவார்கள். ஆலயத்தில் பரிசுத்தமாய்க் காணப்படுவார்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையிலே அசுத்தமாயிருப்பார்கள். ஒரு பகுதியில் பரிசுத்தம், மறுபகுதியில் பரிசுத்தக் குலைச்சல்.
ஞாயிற்றுக்கிழமை உபவாசமிருந்து ஜெபித்து விடுகிறதினாலே மற்ற நாட்களில், எப்படியும் வாழலாம் என்று அர்த்தமில்லை. நான் என் வாழ்க்கையின் இந்தக் குறிப்பிட்ட பகுதியில் கடினமாய், பரிசுத்தமாய் இருக்கிறதினால், அடுத்த பகுதியில் கொஞ்சம் பாவம் இருந்தால் பரவாயில்லை என்று சாக்குபோக்கு சொல்ல முடியாது. உங்கள் பாளயம் எங்கும் பரிசுத்தமாயிருக்க வேண்டுமென்று தேவன் பிரியப்படுகிறார்.
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்திலே பிரயாணம் செய்தபோது, அவர்கள் மத்தியிலே வாசம்பண்ண விரும்பி கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தைப் போட வேண்டுமென்று மோசேக்குக் கட்டளையிட்டார். தேவன் தங்குகிற இடம் எவ்வளவு பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆகவேதான் உங்களுடைய பாளயம் எங்கும் பரிசுத்தமாயிருக்க வேண்டியது அவசியம்.
இயேசுகிறிஸ்து ஒரு நாள் சகேயுவின் வீட்டில் தங்க விரும்பி, அதை அவருக்கு தெரிவித்தார். இயேசு தங்க வரும்போது அந்த வீட்டில் அசுத்தங்கள் காணப்பட முடியுமா? அசுத்தமான எல்லாவற்றையும் சகேயு நீக்கிப் போட்டிருப்பார். இயேசு வாசம் பண்ணுகிறதற்கு ஏற்ற இடமாக அதை வைத்திருந்திருப்பார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் உள்ளத்தில் வாசம் பண்ண விரும்புகிறார் என்னும்போது உங்களுடைய உள்ளம் பரிசுத்தமாய் இருக்க வேண்டாமா? உங்கள் உள்ளத்தில் அசுத்தங்களுக்கும், தகாத உறவுகளுக்கும், தகாத சிநேகங்களுக்கும் இடம் கொடுப்பீர்களானால், கர்த்தர் எப்படி உங்கள் உள்ளத்தில் வாசம்பண்ணி உலாவ முடியும்? ஆகவே உங்களுடைய பாளயத்தின் நீளம் அகலம் உயரம் எங்கும் பரிசுத்தமாயிருப்பதை உறுதி செய்யுங்கள்.
நினைவிற்கு:- நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி, 3:16).