No products in the cart.
செப்டம்பர் 05 – சமாதானத்தின் தேவன்!
“சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்” (ரோமர் 16:20).
நம் தேவன் சமாதானத்தின் தேவன். சாத்தானோ, சமாதானத்தைக் கெடுக்கிறவன். ஆகவே, போராட்டம் கர்த்தருக்கும், சாத்தானுக்குமுரியது. ஜெயமோ நமக்குரியது. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை நம் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார். “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்” (ஆதி. 3:15) என்று கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே வாக்குப் பண்ணினார்.
ஆதியிலே வாக்குப்பண்ணின ஆண்டவர், அதைக் கல்வாரி சிலுவையிலே நிறைவேற்றிக் கொடுத்தார். சத்துருவின் தலையை நசுக்கினார். தன் இரத்தத்தைக் கொண்டு அவன் கிரியைகளை அழித்தார். பிசாசின் கிரியைகளை அழிக்கும்படியாகவே தேவகுமாரன் வெளிப்பட்டார். இன்றைக்கும் இயேசுவின் இரத்தத்திற்கு சாத்தான் பயந்து நடுங்குவதின் காரணம் இதுதான்.
நெப்போலியன் அநேக தேசங்களைக் கைப்பற்றின பின்பு, உலகம் முழுவதையும் கைப்பற்ற விரும்பினார். தன்னுடைய ராணுவ தளபதிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தபோது, உலக வரைபடம் ஒன்றை சுட்டிக் காண்பித்தார். அதில் சில பகுதிகள் சிகப்பு நிறத்தால் குறியிடப்பட்டிருந்தன. ‘இதுதான் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருந்த தேசங்கள். இந்த சிகப்பு குறிகள் மட்டும் இல்லாதிருந்தால் முழு உலகத்தையும் எனது ஆளுகைக்குள்ளே கொண்டு வந்திருப்பேன்’ என்று முழங்கினார்.
அதுபோலத்தான், கொல்கொதாவில் சிந்தப்பட்ட இரத்தத்தை சாத்தான் சுட்டிக் காண்பித்து, அந்த இரத்தம் மாத்திரம் சிந்தப்படாமலிருந்தால், முழு உலகத்தையும் என்னுடைய கையின் கீழ் கொண்டு வந்திருப்பேன் என்று சொல்லுகிறான். ஆனால், கர்த்தரோ, மரணத்தின் அதிபதியான சாத்தானை தன்னுடைய மரணத்தினால் வென்றார். நமக்கு ஜெயத்தைக் கட்டளையிட்டார். ஆகவேதான் “இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57) என்று சொல்லி அவரை ஸ்தோத்தரிக்கிறோம்.
சத்துரு சதி செய்யும்போது, சமாதானத்தின் தேவன், சாத்தானுடைய தலையை நசுக்கி, அவனை அழிக்கத் தீவிரப்படுகிறார். ‘அவர் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் திட்டமாய்ச் சொல்லுகிறார்.
ஒரு சமுக சீர்திருத்தவாதி, “ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சு கரத்தால் ஆகாரத்தை வாய்க்கு கொண்டு போவதும், ஒரு பலசாலி தன் கையினால் ஆகாரத்தை சாப்பிடுவதும் ஒன்றுதான். பெலன் ஆகாரத்தைப் பொறுத்தது; கையைப் பொறுத்ததல்ல” என்றார். அதுபோல நீங்கள் பெலவீனமான உங்களுடைய கரத்தினால் கர்த்தரைப் பிடித்துக் கொண்டால் போதும். அவர் உங்களுக்கு சமாதானம் தருவார். இரட்சிப்பிலே மனிதன் தேவனோடு ஒப்புரவாகிறான். வளர்ச்சியடைந்த கிறிஸ்தவனோ, தேவனுடைய சமாதானத்திலே வாழ்ந்து மகிழுகிறான். தேவபிள்ளைகளே, நீங்கள் தேவ சமாதானத்தால் நிரம்பியிருக்கிறீர்களா?
நினைவிற்கு:- “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்” (1 கொரி. 14:33).