No products in the cart.
ஆகஸ்ட் 02 – பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரம்!
“என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப்.9:15).
‘ஒருவன் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவனை பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாக பயன்படுத்துவேன்’ என்பதுதான் தேவன் கொடுக்கிற வாக்குத்தத்தம். ‘ஒருவன் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால்’ என்ற வார்த்தையை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
பழைய ஏற்பாட்டிலே, பல வகையான சுத்திகரிப்புகள் இருந்தன. ‘இரத்தத்தைத் தெளித்து தீட்டுக்களை சுத்திகரித்தார்கள்’ (லேவி. 16:19). ‘சுத்திகரிக்கும்படி பாவ நிவர்த்தி செய்தார்கள்’ (லேவி. 16:30). ‘தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் சுத்திகரிக்கப்பட்டார்கள்’ (எண்.19:12). ‘இன்னும் சுத்திகரிப்பதற்காக பலவிதமான வாசனை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள்’ (எஸ்தர் 2:12).
புதிய ஏற்பாட்டிலே, மனச்சாட்சியின் சுத்திகரிப்பைக் குறித்து வேதம் சொல்லுகிறது, “கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்” (எபி. 9:14). “நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணினார்”(எபி.1:3). ‘சுத்திகரித்துக்கொண்டால் உங்களை பரிசுத்தமுள்ள பாத்திரமாய் பயன்படுத்துவேன்’ என்பதுதான் கர்த்தருடைய வாக்குத்தத்தமாகும்.
சுத்திகரிப்புக்கென்று வேதத்திலே ஒரு அதிகாரம் உண்டென்றால், அது சங்கீதம் 51தான். அங்கே தாவீது தான் சுத்திகரிக்கப்பட மூன்று காரியங்களைத் தன்னைவிட்டு நீக்க வேண்டும் என்று மன்றாடுகிறார். 1) என் மீறுதல் நீங்க என்னைச் சுத்திகரியும். 2) என் அக்கிரமங்கள் நீங்க என்னை முற்றிலும் கழுவும். 3) என் பாவமற சுத்திகரியும் என்று கெஞ்சுகிறார். “ஈசோப்பினால் என்னைச் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்” என்று கதறுகிறதைப் பாருங்கள் (சங். 51:1,2,7).
மோசேயினுடைய வாழ்க்கையிலே, கர்த்தர் ஒரு பெரிய நோக்கம் கொண்டிருந்தார். தம்முடைய ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கி, கானான் தேசத்திற்குள் கொண்டு போக வேண்டும் என்பதே அந்த நோக்கம். அந்த நோக்கத்திற்காக மோசேயை பரிசுத்தப்படுத்தி ஆயத்தப்படுத்த வேண்டியதாயிற்று. கர்த்தர் சொன்னார், “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்தபூமி” (யாத். 3:5). பரிசுத்தமுள்ள தேவனுடைய பணிக்கு, தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்தம் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக ஆண்டவர் நாற்பது ஆண்டுகள் மோசேயை சுத்திகரித்தார். பார்வோனுடைய அரண்மனையில் கற்ற எல்லா வித்தைகளையும் மறந்து கர்த்தரையே சார்ந்துகொள்ளும்படி செய்தார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் பல பயிற்சிகளின் வழியாக உங்களை நடத்திச் சென்று கொண்டிருக்கலாம். நீண்ட நாட்கள் காத்திருக்கிறேனே என்று மனம் தொய்ந்து போகாதிருங்கள். அவர் உங்களைச் சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த விரும்புகிறார் என்பதை மறந்து போகாதிருங்கள். வேதம் சொல்லுகிறது, “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5:6).
நினைவிற்கு:- “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9).