Appam, Appam - Tamil

ஜுன் 15 – துரத்துவீர்கள்!

“உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள் (லேவி. 26:7).

‘துரத்துவீர்கள்’ என்று கர்த்தர் அன்போடு நமக்கு வாக்களிக்கிறார். நாம் சத்துருக்களால் துரத்தியடிக்கப்படாமல், கர்த்தர் தருகிற பலத்தினாலே நாம் அவர்களைத் துரத்தி முறியடிப்போம். ஒரு வழியாய் நமக்கு விரோதமாய் வருகிறவர்கள் ஏழு வழியாய் புறப்பட்டு ஓடுவார்கள். சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறதினாலே, நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.

ஒருமுறை ஒரு காவல்துறை அதிகாரி திருடன் ஒருவனை துரத்திச் சென்றார். அந்த அதிகாரி ஓட்டத்தில் வல்லுநர்தான். சிறப்பாக ஓடி தங்கப்பதக்கங்களை பெற்றவர்தான். ஆனால், திருடனின் வேகமோ மிக அதிகமாயிருந்தது. அந்த அதிகாரி ஆச்சரியப்பட்டு, ஒலிப்பெருக்கியில் கீழ்க்கண்டவாறு அறிவித்தார். ‘உன்னைக் கைது செய்ய விரும்பவில்லை. உன்னுடைய ஓட்டத்திறமை அரசாங்கத்திற்கு தேவை. ஆகவே, நின்றுவிடு’ என்றார். அந்த திருடனும் அதைக்கேட்டு நின்றான். தன்னுடைய வறுமையினிமித்தம் திருடினதை ஒப்புக்கொண்டான். நீதிபதியிடம் மன்னிப்பு பெற்று அரசாங்கத்தில் வேலைக்கு சேர்ந்தான். பிற்காலத்தில் அவன் மிகவும் சிறந்த ஒரு காவல் அதிகாரியாக விளங்கினான். எல்லா திருடர்களையும் வேகமாகத் துரத்திப் பிடித்து அரசாங்கத்திற்கு சிறப்பாக சேவை செய்தான்!

ஒரு காலத்தில் நாமும் துரத்தப்பட்டவர்களாகவே இருந்தோம். பாவங்களும், சாபங்களும் நம்மைத் துரத்தின. உள்ளுணர்வும், மனசாட்சியும் நம்மைத் துரத்தின. நோய்களும், வியாதிகளும் நம்மைத் துரத்தின. சோதனைகளும், பில்லி சூனியங்களும் நம்மைத் துரத்தின. வறுமையும் போராட்டமும் நம்மைத் துரத்தின.

ஆனால், ஒருநாள் இயேசு கிறிஸ்து நம்மை சந்தித்தார். துரத்தப்பட்டுக்கொண்டிருந்த நமக்கு அவரே அடைக்கலமும் பெலமுமானார். நம்மைத் திடப்படுத்தி, தைரியப்படுத்தி, வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, தமது உன்னத பெலனினால் நம்மை நிரப்பினார். ஆகவே, இனி நாம் துரத்தப்படுபவர்களாயிராமல் அசுத்த ஆவிகளைத் துரத்துகிறவர்களாய் மாறிவிட்டோம். அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து தெய்வீக பெலத்தில் வல்லவர்களானோம். இன்றைக்கு ஆண்டவர் நம்மைப் பார்த்து, “உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்” (லேவி. 26:7) என்று வாக்களித்திருக்கிறார்.

எகிப்திலே வாழ்ந்த இஸ்ரவேலரை அங்குள்ள ஆளோட்டிகள் துரத்தினார்கள். அடிமைகளாக்கி வேலை வாங்கினார்கள். அவர்களுடைய ஜீவன் எல்லாம் கசப்பாகும்படி கடுமையாய் நடத்தினார்கள். ஆனால், கர்த்தரோ இஸ்ரவேலர்மேல் மனதுருகினார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி வனாந்தரத்திற்கு கொண்டுவந்தார். அங்கே அவர்களை பலசாலிகளாக்க தீர்மானித்தார். சாதாரண உணவைக் கொடுக்காமல் தேவதூதர்களின் உணவான வானத்து மன்னாவைக் கொடுத்தார். வனாந்தரத்திலே நடக்கச்செய்து அந்த பயிற்சியினால் காண்டாமிருகத்துக்கொத்த பெலன் உள்ளவர்களாக்கினார்.

தேவபிள்ளைகளே, இன்று உங்களுக்கு விரோதமாக பல ஆவிகள் போராடலாம். பல சத்துருக்கள் எழும்பலாம். கர்த்தர் உங்களை பலத்தால் இடைகட்டி உங்கள் சத்துருக்களை உங்களுக்குமுன் நின்று துரத்திவிடுவார். உங்கள் சத்துருக்களின்மேல் அவர் உங்களுக்கு ஜெயம் கொடுப்பார். பலங்கொண்டு திடமனதாயிருங்கள்.

நினைவிற்கு:- “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” (யாக். 4:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.