No products in the cart.
மார்ச் 03 – வாக்குத்தத்தங்கள்!
“நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து ….” (யாத். 15:26).
தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கான அநேக வழிமுறைகளை வேதம் நமக்குச் சுட்டிக்காண்பிக்கிறது. அதில் அவருடைய வாக்குத்தத்த வசனங்கள் மிகவும் முக்கியமானவை. நாம் அவருடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டு உறுதியாக ஜெபிக்கும்போது தெய்வீக சுகத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ளுகிறோம்.
இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தங்கள் உண்மையும் உத்தமமுமானவை. அவர் பொய் சொல்ல மனிதன் அல்ல. மனம்மாற மனுபுத்திரனும் அல்ல. அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது.
ஆகவே ஜெபிக்கும்போது அவருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு ஜெபிப்போமாக. “வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபி. 10:23). மட்டுமல்ல, அவர் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார் (ரோம. 4:21) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
கர்த்தர் வேதத்தில் சுகமளிப்பதற்காக கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்களையெல்லாம் வரிசையாகத் தொகுத்து ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொண்டு முடிந்தவரையிலும் மனப்பாடம் செய்யுங்கள். பின்பு விசுவாசத்தோடு அந்த வாக்குத்தத்தங்களை உரிமைபாராட்டி ஜெபியுங்கள். வாயினால் விசுவாச அறிக்கையை திரும்பத்திரும்ப சொல்லுங்கள்.
“நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்னேன்” (யாத். 15:26). “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா. 53:5). “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத். 8:17). “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங். 107:20).
“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி…. திருப்தியாக்குகிறார்” (சங். 103:3,5). “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதன் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்” (மல். 4:2) இந்த வாக்குத்தத்தங்களை அவ்வாறு பயன்படுத்துங்கள்.
மேலும், நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது அந்தந்த பகுதிகளில் காணப்படும் வாக்குத்தத்தங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆவியும் ஜீவனுமான இந்த வாக்குத்தத்தங்கள் உலர்ந்த எலும்புகளை உயிரடையப்பண்ணும்.
மட்டுமல்ல, தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் செய்யவேண்டிய கடமைகளையும் செய்யுங்கள். பாவத்தின் விளைவாக வியாதி வந்திருக்கும் என்றால் கல்வாரி சிலுவையை நோக்கிப்பார்த்து இயேசுவின் இரத்தத்தினால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட ஒப்புக்கொடுங்கள்.
தேவபிள்ளைகளே, ஒருவேளை ஒருவர்பேரில் உள்ள கசப்பு மற்றும் மன்னியாத சுபாவம் காரணமாக வியாதி வந்திருக்குமென்றால், அவற்றையெல்லாம் உங்களைவிட்டு அகற்றுங்கள். அற்புத சுகம்பெற இதுவே வழி.
நினைவிற்கு:- “படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப் போடுவீர்” (சங். 41:3).