Appam, Appam - Tamil

May 05 – வெளிச்சம்!

“தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று” (ஆதி. 1:3).

கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவருகிறவர், பிரகாசத்தைக் கொண்டுவருகிறவர். மகிமையைக் கொண்டுவருகிறவர். இருளிலிருந்து வெளிச்சத்தை அற்புதமாய் சிருஷ்டித்த தேவன் உங்களுடைய வாழ்க்கையிலும் இருளை நீக்கி மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் சிருஷ்டிக்க வல்லவராயிருக்கிறார்.

பரிசுத்த வேதகாமமானது ‘ஒரு வெளிச்சத்தின் புத்தகம்’ என்று உலகமெங்கும் அழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் முதல் அதிகாரமாகிய ஆதி. 1:3 இல் வெளிச்சம் உண்டாவதாக என்று சொன்ன தேவன், பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய மல்கியாவில் “உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்” என்று சொல்லுகிறார் (மல். 4:2).

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தில் ஒரு பிரகாசிக்கிற நட்சத்திரத்தைப் பார்க்கிறோம். அதன் வெளிச்சம் சாஸ்திரிகளை அருமையாய் கிறிஸ்துவண்டை வழிநடத்திக்கொண்டு சென்றது (மத். 2:9). அப்படியே புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகத்தில் இயேசுகிறிஸ்து, “நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்” என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம் (வெளி. 22:16).

கிறிஸ்து உலகின் ஒளியாயிருக்கிறதுபோல அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும் இருண்டுகிடக்கிற உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். மலையின்மேல் இருக்கிற ஒரு பட்டணமாக, கலங்கரை தீபமாக, விளங்கவேண்டும் என்பதுதான் கர்த்தருடைய எதிர்பார்ப்பும் விருப்பமுமாகும். அவரே உங்களைப் பிரகாசிப்பிக்கச்செய்கிறார்.

வேதம் சொல்லுகிறது, “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவா. 1:9).

அவர் உலகப்பிரகாரமான வெளிச்சம் கொடுக்கிறவர் மட்டுமல்ல, உங்களுடைய உள்ளத்தையும் பிரகாசிக்கச்செய்கிறவர், ஆத்துமாவையும் கூட பிரகாசிக்கச்செய்கிறவர். “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105).

தேவன் தருகிற ஆலோசனைகளெல்லாம் உங்களுடைய ஆத்துமாவுக்கு வெளிச்சமாக இருக்கின்றன. பாதை தெரியாமல் திகைக்கும்போது, நான் “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று சொல்லி உங்கள் பாதைகளுக்கெல்லாம் வெளிச்சம் தருகிறார் (சங். 32:8).

அப். பேதுரு சொல்லுகிறார் “இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” (2 பேது. 1:19).

பரலோகம் முழுவதும் தேவ மகிமையின் வெளிச்சத்தால் நிறைந்திருக்கிறது. நீங்களும் அந்த மகிமைக்கு ஒப்பான ஒரு மகிமையை தரிக்கவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமும் பிரியமுமாயிருக்கிறது (1 யோவா. 3:2).

தேவ பிள்ளைகளே, அதற்காக உங்களை ஆயத்தப்படுத்துவீர்களா? மகிமையின் இராஜா மகிமையான தேவதூதர்களோடு வெளிப்படும் காலம் சமீபமாயிருக்கிறது அல்லவா?

நினைவிற்கு:- “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.