Appam, Appam - Tamil

ஜனவரி 28 – இழந்துபோன பார்வை

“இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்” (மாற். 10:51).

இயேசு கிறிஸ்து, அற்புதமானவர். அவர் போகிற இடங்களிலெல்லாம் அற்புதங்கள் நடைபெற்றபடியால், ஜனங்கள் எல்லாத்திசையிலிருந்தும் அவரிடத்திற்கு ஓடி வந்தார்கள். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி. 13:8). அவர் இன்றைக்கு, உங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார்.

ஒரு நாள் இயேசு கிறிஸ்து, எரிகோ பட்டணத்தின் வீதி வழியாக நடந்து போனார். அங்கே இரண்டு கண்களிலும் பார்வையை இழந்த, குருடனான பர்திமேயு பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். அவன் பிறந்ததிலிருந்தே குருடனாய் இருந்தபடியால், அவனுடைய வாழ்க்கை முழுவதும் இருளாயிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து, அவன் ஒளிமயமான ஒரு எதிர்காலத்துக்குள் வந்தான். இந்த சம்பவத்தை தியானிப்போமா?

‘பர்திமேயு’ என்ற வார்த்தைக்கு, ‘திமேயுவின் மகன்’ என்பது அர்த்தமாகும். திமேயுவும்கூட, ஒரு பிச்சைக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். ஒருவேளை அவன் செல்வந்தனாயிருந்திருந்தால், தன் மகனை பிச்சையெடுக்க அனுமதித்திருக்கமாட்டான். திமேயு, ஒரு சாதாரண பிச்சைக்காரன். ஆனால் பர்திமேயு, குருடனான பிச்சைக்காரன்.

நம்முடைய முற்பிதாவாகிய ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபோது, தங்களது ஆவிக்குரிய பார்வையை இழந்து குருடரானார்கள். அவர்களுக்கும், தேவனுக்குமிடையே அவர்களது பாவம் பிரிவினையை உண்டாக்கினது. இன்றைக்கு நாமும்கூட ஆதாமின் சந்ததியாக, கண் தெரியாத குருடர்களைப்போல இருக்கிறோமா? சாத்தான் நமது மனக்கண்களைக்கூட குருடாக்கிப்போட்டுவிட்டானா (2 கொரி. 4:4).

ஒரு பெரிய செல்வந்தனின் ஒரே மகனை, சிலர் கடத்திச் சென்று, அவன் கண்களில் கரப்பான் பூச்சியை வைத்துக் கட்டி, ஒரு குகைக்குள் போட்டுவிட்டார்கள். இரண்டு மூன்று நாட்களாக அந்தக் கரப்பான் பூச்சி அவன் கண்களைத் துளைத்துக்கொண்டேயிருந்தது. முற்றிலுமாய் அவன் குருடாகி பார்வையை இழந்துவிட்டான். பின்பு, பிச்சையெடுப்போரிடம், அவனை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்கள். சீரும், சிறப்புமாய் வாழ்ந்த அந்த சிறுவன், கண் தெரியாத பிச்சைக்காரனாகி, பல ஆண்டுகள் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த, அந்த செல்வந்தனின் மகனைப் பெற்றோர் அடையாளம் கண்டுபிடித்தார்கள். ஒருவர் கண்தானம் செய்ய முன்வந்ததால், அவனுடைய இழந்துபோன கண்பார்வை திரும்ப வந்தது. கண் திறக்கப்படுவது என்பது எத்தனை ஆச்சரியமானது! அவனும் அவனது பெற்றோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இயேசுகிறிஸ்து உலகப்பிரகாரமான கண்களையும் திறக்க வல்லவர். அறிவுக் கண்களையும், ஆன்மீகக் கண்களையும் பிரகாசிக்கச்செய்ய வல்லமையுள்ளவர்.

தேவபிள்ளைகளே, வேதத்தை அறிந்துகொள்ள, அதிலுள்ள இரகசியங்களைத் தெரிந்துகொள்ள, உங்களுக்கு ஆவிக்குரிய கண்கள் தேவை. கர்த்தருடைய செய்திகளைப் பிரசங்கிக்க, பிரகாசமுள்ள மனக்கண்கள் தேவை. அதை இழந்துவிடாதிருங்கள். இன்றைக்கு கர்த்தரிடம், ‘தேவனே, என்னுடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்தருளும்’ என்று கேட்பீர்களா?

நினைவிற்கு:- “குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார். மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்” (சங். 146:8,9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.