Appam, Appam - Tamil

ஜனவரி 27 – இழந்துபோன ஆவிக்குரிய பெலன்

“உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது” (நியா. 16:6).

தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, ‘உன் மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது’ என்று கேட்டாள். இது மனுஷர் பலம் அல்ல, தெய்வீக பலம். பரிசுத்த ஆவியினால் உண்டாகிற பலம். உன்னதத்திலிருந்து வருகிற பலம்.

இயேசு சொன்னார், “உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்” (லூக். 24:49). “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப். 1:8).

ஆனால் சிம்சோன் தன்னுடைய பெலத்தின் இரகசியத்தை காத்துக்கொள்ளவில்லை. பலட்சயமாகி, மற்ற மனுஷர் போலாவேன் என்று இரகசியத்தைச் சொன்னார் (நியா. 16:7). நீங்கள் ஒருபோதும் பலட்சயமாகி மற்ற மனுஷரைப்போலாகும் நிலைமைக்கு ஆளாகக்கூடாது. கர்த்தர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியைத் தந்து மற்றவர்களைப்பார்க்கிலும் விசேஷமுள்ளவர்களாக்கியிருக்கிறார். நீங்கள் ஆகாயத்துப் பறவைகளைப்பார்க்கிலும், மற்ற மனுஷரைப்பார்க்கிலும், தேவதூதர்களைப்பார்க்கிலும் விசேஷித்தவர்கள்.

மற்றவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. மற்றவர்கள் உலகத்திற்காகவே வாழுகிறார்கள், உலகத்தில் மடிகிறார்கள். ஆனால் நீங்களோ, நித்திய ஜீவனைப் பெறும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பரலோகத்தில் உங்களுக்கு சுதந்திரம் உண்டு. உங்களுடைய நடை, உடை, பாவனைகள் மட்டுமல்ல, பேச்சு, செயல்கள் யாவும் நீங்கள் பரலோகத்திற்குரியவர்கள் என்பதைப் பிரதிபலிக்கவேண்டும்.

ஒரு விவசாயி சிங்கக்குட்டி ஒன்றைக் கண்டெடுத்து அதைத் தன்னுடைய பன்றிக்குட்டிகளோடு சேர்த்து வளர்த்து வந்தான். ஒரு நாள் காட்டில் ஒரு பெரிய சிங்கம் உறுமுவதைக் கேட்டதும் பன்றிக்குட்டிகளெல்லாம் பயந்து நடுங்கி ஓடின. இந்த சிங்கக்குட்டியோ தனித்து நின்றது. ஒருநாள் தண்ணீர் குடிக்கப்போகும்போது, தன்னுடைய சாயல் அதிலே தெரியவே சிங்கக்குட்டிக்கு தான் வித்தியாசமாய் இருப்பது புரிந்தது. ஆகவே அது சத்தமிட ஆரம்பித்தபோது அது கர்ஜனையாய் வெளிவந்தது. அப்பொழுதுதான் தான் காட்டுக்கெல்லாம் இராஜா என்பதை அது புரிந்துகொண்டது.

பன்றிகளோடு சிங்கக்குட்டி வாழ்ந்தாலும், சிங்கக்குட்டி சிங்கக்குட்டிதான். கோழிக் குஞ்சுகளோடு கழுகுக் குஞ்சுகள் வாழ்ந்தாலும், கழுகுக் குஞ்சு கழுகுக் குஞ்சுதான். அதுபோல் உலகத்தாரோடு நீங்கள் வாழ்ந்தாலும், நீங்கள் உன்னதத்திற்குரியவர்கள். ஒருநாளும் உங்களுடைய ஆவிக்குரிய பெலனை இழந்து பலட்சயமாகி மற்ற மனுஷரைப் போலாகிவிடக்கூடாது. வேறுபாட்டின் ஜீவியம் உங்களுக்கு மிக மிக அவசியம்.

சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது ‘நீர் தேவனுடைய குமாரனேயானால் இறங்கி வாரும்’ என்று கேட்டார்கள். அவர் இறங்கி வரவில்லை. ஒரு சாதாரண மனிதனைப்போல நடந்துகொள்ள அவர் முன்வரவில்லை. தேவகுமாரன் தேவகுமாரன்தான். நமக்கு இரட்சிப்பு உண்டாகும்படி மனுஷகுமாரனாய் வந்தார். பரிசுத்தத்தையும், தெய்வீகத்தையும், கடைசிவரை பாதுகாத்துக்கொண்டார். தேவபிள்ளைகளே, நீங்களும் அப்படியே விளங்குவீர்களாக!

நினைவிற்கு:- “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரி. 6:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.