No products in the cart.
நவம்பர் 23 – பாவ சிந்தை
“அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு …. மனஸ்தாபப்பட்டார்” (ஆதி. 6:5,6).
சிந்தனைகளைக் குறித்தும், எண்ணங்களைக் குறித்தும், நினைவுகளைக் குறித்தும் ஒவ்வொரு விசுவாசியும் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். சிந்தனைகள்தான் சொற்களாக மாறுகின்றன. சொற்கள் செயல்களாக மாறுகின்றன. நன்மையான செயல்கள் கர்த்தரைப் பிரியப்படுத்தும். தீமையான செயல்களோ, கர்த்தரை வருத்தப்படச்செய்வதுடன், அவனை பாதாளத்துக்கு நேராய் வழிநடத்தும். பாவ சிந்தனைகள் அபாயகரமானவை.
வேதம் சொல்லுகிறது, “மனுஷனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்” (மாற். 7:21,22).
இங்கே கொடுக்கப்பட்ட பட்டியலில் விபச்சாரங்கள் மற்றும் வேசித்தனம் ஆகிய பாவங்களுக்கும் முன்பாக பொல்லாத சிந்தனைகளைத்தான் கர்த்தர் வைக்கிறார். அநேகர் தங்கள் சிந்தனைகளை மனம்போல, காட்டுக்கழுதைகளைப்போல, திரியவிட்டு, முடிவில் இச்சைகளுக்குள் விழுகிறார்கள். இச்சையானது அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கெடுத்து அவர்களை குழிக்குள் தள்ளுகிறது.
அப். பவுல் சொல்லுகிறார், “எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:5).
நோவா காலத்தில், கொடிய நியாயத்தீர்ப்பாகிய வெள்ளப்பெருக்கு பூமிக்கு வந்ததன் முக்கிய காரணம், மனிதனுடைய இருதயத்து நினைவுகள் நித்தமும் பொல்லாததாகவே இருந்ததே. வேதம் சொல்லுகிறது, “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு …. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்” (ஆதி. 6:5,6).
ஆகவே கர்த்தர் அவர்களுடைய எண்ணங்களை நியாயந்தீர்த்தார். இதனால் ஜலப்பிரளயம் வந்தது. பாவ எண்ணங்களில் ஊறிப்போயிருந்த அத்தனைபேரையும் அது அழித்துப்போட்டது.
இந்த கிருபையின் காலத்திலே வாழுகிற நாம் எவ்வளவு பயத்தோடும், நடுக்கத்தோடும் நம்முடைய எண்ணங்களைக் காத்துக்கொள்ளவேண்டும்! எவ்வளவு கருத்தோடு பரிசுத்த ஜீவியம்செய்து, வெற்றியுள்ளவர்களாய்த் திகழவேண்டும்! தேவகிருபை பெற்றிருக்கிற நம்முடைய காலங்களில், நியாயத்தீர்ப்பு கடுமையாயிருக்கும் அல்லவா?
“நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி. 22:11) என்று வேதம் சொல்லுகிறது. வேர் திடமானதாய் இருந்தால் கிளைகளும் பெலமானதாக இருக்கும். எண்ணங்கள் பரிசுத்தமாயிருக்குமானால், முழு வாழ்க்கையும் பரிசுத்தமாயிருக்கும். தேவபிள்ளைகளே, உங்களுடைய எண்ணங்களைப் பரிசுத்தமாக்கும்படி எப்பொழுதும் ஆவியினால் நிரம்பியிருங்கள்.
நினைவிற்கு:- “பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரி. 7:1).