Appam, Appam - Tamil

செப்டம்பர் 15 – எழுந்திருக்க அழைப்பு!

“எழுந்திரு, உன்னை அழைக்கிறார்” (மாற். 10:49).

வழி ஓரமாக அமர்ந்திருக்கும் பர்திமேயு முதலாவது எழுந்திருக்கவேண்டும். சோம்பேறியாய் இருக்கிற நிலைமையிலிருந்து அவன் எழுந்திருக்கவேண்டும். புழுதியான தரையில், கையேந்தும் நிலையில் உட்கார்ந்திராமல் அவன் எழுந்திருக்கவேண்டும். குருட்டுத்தன்மையிலிருந்து அவன் எழுந்திருக்கவேண்டும்.

நம்மையும்கூட ஆண்டவர், ‘என் பிள்ளையே, சோர்வான நிலைமையிலிருந்து தூசியை உதறிவிட்டு எழுந்திரு, கழுகைப்போல உன்னதங்களுக்கு செட்டைகளை அடித்துப் பறக்க எழுந்திரு. உனக்கென்று வைத்திருக்கிற வரங்களையும், வல்லமையையும், பெற்றுக்கொள்ள எழுந்திரு’ என்கிறார்.

கெட்ட குமாரனுக்கு புத்தி தெளிந்தபோது அவன், ‘நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போவேன்’ என்றான். அப்படியே அவன் எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான் (லூக். 15:18,19). பன்றிகளின் இடத்தைவிட்டு அவன் எழுந்திருக்க வேண்டியதாயிருந்தது. உலக இச்சைகளைவிட்டு எழுந்திருக்க வேண்டியதாயிருந்தது. தன்னண்டை வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளாத மனதுருக்கமுள்ள கிறிஸ்துவண்டை எழுந்து வரவேண்டியதாயிருந்தது.

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தார். பாவத்தின் அகோரத்தினால் வந்த வேதனைகளையும், சாபங்களையும், நோய்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்களா? சோர்ந்துபோகாதிருங்கள். இயேசு இருகரம் நீட்டி, “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவா. 6:37) என்று அன்போடு அழைக்கிறார்.

ஆவிக்குரிய வாழ்க்கையிலே தூங்கி வழிகிறவர்களையும் கர்த்தர் எழுந்திருக்குமாறு அழைக்கிறார். உற்சாகமாய் ஊழியம் செய்யவேண்டிய நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்தால் உலகமெங்கும் சுவிசேஷம் செல்லுவதெப்படி? “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவா. 9:4) என்று வேதம் சொல்லுகிறதே.

வேதம் சொல்லுகிறது, “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” (எபே. 5:14). தூங்கி விழுவதினாலே சிம்சோன் தன் பெலனை இழந்தாரே. தூங்கி விழுந்த ஐத்திகு, ஜீவன் போன நிலைமைக்கு வந்தாரே. கப்பலின் அடித்தட்டில் தூங்கிக்கொண்டிருந்த யோனா தீர்க்கதரிசியை புறஜாதியார் தட்டி எழுப்பி ஜெபிக்கச் சொன்னார்களே. தூங்கி விழுந்த எலியா தீர்க்கதரிசியை தேவதூதன் தட்டியெழுப்பி, போஜனம்பண்ணி பெலன்கொள்ளச்செய்தாரே. நீங்கள் போகவேண்டிய தூரம் வெகு தூரம். கர்த்தர் உங்களைக்கொண்டு அநேக பெரிய காரியங்களைச் செய்ய இருக்கிறார். சோர்வின் தூக்கத்தைவிட்டு எழுந்திருங்கள்.

கர்த்தர் தம்முடைய மணவாட்டியையும்கூட, ‘எழுந்திரு’ என்று சொல்லுகிறார். “என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா. இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா” (உன். 2:10,11,13) என்று அழைக்கிறார். தேவபிள்ளைகளே, வருகையின் அடையாளங்களெல்லாம் எங்கும் காணப்படுகின்றன. தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டன. எழுந்து மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போவோமா?

நினைவிற்கு:- “எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்” (ஏசா. 52:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.