No products in the cart.
பிப்ரவரி 13 – ஜெபத்தினால் பிரியம்!
“அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).
“கர்த்தருக்குப் பிரியமானது எது” என்பதுபற்றி தொடர்ந்து சிந்தித்துக்கொண்டு வருகிறோம். ஜெபம்பண்ணுவது தேவனுக்குப் பிரியம் என்பதை நாம் தியானிக்கப்போகிறோம்.
வேதம் சொல்லுகிறது, “அவர் ஜெபம் பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29). “இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்; இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று” (மத். 17:5). இரண்டாம் முறையாக, “இவர்மேல் பிரியமாயிருக்கிறேன்” என்று பிதாவானவர் சொன்ன சந்தர்ப்பம் இயேசு ஜெபித்த ஜெபவேளையாகும்.
ஜெபிக்கிற தேவனுடைய பிள்ளைகள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். அவர் ஆவலோடு ஜெபத்தைக் கேட்பதுடன், ஜெபத்துக்கு பதில் அளிப்பவராகவும் இருக்கிறார். ஜெபம் உங்களையும், கர்த்தரையும் மிக அருகிலே கொண்டுவந்துவிடுகிறது. ஜெபம் கர்த்தருடைய பார்வையிலே மனமகிழ்ச்சியாய் இருக்கிறது.
ஜெபத்தில் பல வகை உண்டு. சில ஜெபங்கள் போராட்ட ஜெபங்களாய் இருக்கின்றன. சில மன்றாட்டு ஜெபங்களாகவும், சில விண்ணப்ப ஜெபங்களாகவும், சில ஸ்தோத்திர ஜெபங்களாகவும் இருக்கின்றன. உங்கள் ஜெபம் எந்த வகைப்பட்டதாய் இருந்தாலும் சரி, கர்த்தர் அதன்மேல் பிரியமாயிருக்கிறார் என்பது உறுதி. வேதம் சொல்லுகிறது, “அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்” (யோபு 33:26).
இயேசு கிறிஸ்து ஜெபிக்கிறவர். பரிசுத்த ஆவியானவரும் ஜெபிக்கிறவர். இயேசுகிறிஸ்து பிதாவினுடைய வலது பாரிசத்திலே எப்போதும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறவர். பரிசுத்த ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக பிதாவினிடத்தில் விண்ணப்பம் செய்கிறவர். அவரைப்போல நீங்களும் ஜெபித்து விண்ணப்பம் செய்ய முன்வரும்போது, விண்ணப்பம் செய்கிற உங்கள்மேல் அவர் பிரியமுள்ளவராயிருக்கிறார். மட்டுமல்ல, அவர் நீதியின் பலனைத் தந்தருளுகிறார்.
ஜெபிப்பதற்கு முன்பாக உங்களுடைய இருதயத்தை சுத்திகரித்துக்கொள்ளுங்கள். பாவ சிந்தனைகளையும், உலக எண்ணங்களையும் அப்புறப்படுத்திவிடுங்கள். உங்களுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக உத்தமமானதாய் இருக்கட்டும். “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங். 66:18) என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருப்பீர்களானால் தேவன் உங்களுக்குச் செவி கொடுப்பதில்லை. அதே நேரத்தில் “செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்” (நீதி. 15:8). ஜெபம் பண்ணுகிறவன்மேல் கர்த்தருடைய பிரியம் நிறைவாயிருக்கும்.
நினைவிற்கு:- “நீங்கள் ஜெபம்பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” (மாற்கு 11:24).