No products in the cart.
ஜனவரி 10 – புதிய சந்தோஷம்!
“அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்” (சங். 4:7).
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் சகலத்தையும் புதிதாக்கும்போது, புதிய சந்தோஷத்தையும் தந்தருளுகிறார். எத்தனை ஆசீர்வாதம் பாருங்கள்! நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாகும்போது முழுப் பரலோகமே உங்களுக்குள் வந்து இறங்கிவிடுகிறதை உணருவீர்கள். உங்கள் உள்ளம் சந்தோஷத்தால் துள்ளும்.
பாவ மன்னிப்பினால் உண்டாகிற சந்தோஷம், இரட்சிப்பினால் உண்டாகிற சந்தோஷம் மற்றும் பரிசுத்த ஆவியினால் உண்டாகிற சந்தோஷம் ஆகிய அனைத்துமே புதிய சந்தோஷங்கள். உலகம் தரக்கூடாத சந்தோஷங்கள்.
ஒவ்வொரு நாள் அதிகாலை வேளையிலும் தேவனுடைய பாதத்துக்குச் செல்லும்போது, தேவனுடைய இனிய பிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளுகிறது. புதிய சந்தோஷம் உங்களை நிரம்பி வழியச்செய்கிறது.
மோசேயினுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பழைய சந்தோஷத்திற்கும், புதிய சந்தோஷத்திற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! வேதம் சொல்லுகிறது, “மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டார்.” (எபி. 11:24, 25)
ஆம், முன்பு அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவித்தார். பின்பு தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே மிகுந்த சந்தோஷமானதாகவும், பாக்கியமானதாகவும் எண்ணினார்.
ஒருவன் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு அவனுக்கு குடி, கூத்து, கும்மாளங்கள், விபச்சாரம், வேசித்தனங்கள் ஆகியவை சந்தோஷமானவையாய் இருந்திருக்கக்கூடும். உலக சிநேகிதர்கள், சிற்றின்பங்கள் மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கக்கூடும். ஆனால், அவை யாவும் தற்காலிகமானவை. மறைந்துபோகிறவை. முடிவிலே மன வேதனையையும், வெறுப்பையும் கொண்டுவருகிறவை.
ஆனால், கிறிஸ்துவுக்குள் உங்களுக்குக் கிடைக்கும் சந்தோஷமோ ஒவ்வொருநாளும் புதிது புதிதானதாகும். அது மேன்மையும், மகிமையுமான சந்தோஷம். ஈடு இணையற்ற சந்தோஷம். இயேசு கிறிஸ்து அந்த சந்தோஷத்தை இன்றைக்கு உங்களுக்குத் தருகிறார்.
இயேசு சொன்னார், “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவா. 15:11).
அப். பவுல் சிறைச்சாலையில் இருக்கும்போதுகூட, அந்த சந்தோஷத்தை இழந்துவிடவில்லை. அங்கிருந்து பிலிப்பியர் நிருபத்தை எழுதும்போது, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டார் (பிலி. 4:4).
தேவபிள்ளைகளே, எப்பொழுதும் எல்லாவற்றிலும் கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருங்கள்.
நினைவிற்கு:- “இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகே. 8:10).