No products in the cart.
டிசம்பர் 21 – இயேசுவின் நாமம்!
“அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது” (அப். 3:16).
“சர்வாங்க சுகம்” என்ற பதத்தை சற்று சிந்தித்துப்பாருங்கள். கர்த்தருடைய நாமத்தை பேதுரு உபயோகப்படுத்தினபோது பிறவி சப்பாணி சுகத்தைப் பெற்றுக்கொண்டான். அது பரிபூரணமான சுகம். எந்தக் குறைவும் இல்லாத நிறைவான சுகம். அதுவே சர்வாங்க சுகம்.
எந்த மருந்தினாலும், எந்த டாக்டர்களினாலும் சர்வாங்க சுகத்தைத் தரவே முடியாது. சில மருந்துகள் வியாதியிலிருந்து ஓரளவு விடுதலையைத் தருவதைப்போல காணப்பட்டாலும், அவற்றின் பின்விளைவினால் பல்வேறு பெலவீனங்கள் வந்துவிடுகின்றன. ஆனால் முழுக்க முழுக்க பரிபூரணமான சர்வாங்க சுகத்தை ஒரு மனுஷனுக்குக் கொடுக்க முடியும் என்றால் அது இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே முடியும்.
இந்த வசனத்தை மீண்டும் வாசித்துப் பாருங்கள். “அவருடைய நாமத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது”. ஆம், இயேசுவின் நாமத்தினாலே விசுவாசம் வருகிறது. அந்த விசுவாசம் சர்வாங்க சுகத்தைக் கொண்டுவருகிறது. பேதுரு சொல்லுகிறார், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” (அப். 3:6).
“என்னிடத்தில் இருக்கிறவர் பெரியவர். அவர் நாமம் இயேசுகிறிஸ்து. அவரை அறிகிற அறிவேயல்லாமல் வேறே எந்த அறிவும் எனக்குக் கிடையாது. நான் பெரிதாக கல்வி கற்றவனுமல்ல. என்னிடத்தில் உலக அறிவோ, வைத்திய ஞானமோ இல்லை. ஆனால் எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை உடையவர் என்னிடத்தில் இருக்கிறார். ஆகவே அவர் நாமத்தில் நீ எழுந்து நட” என்பதே பேதுரு சொன்னதன் விளக்கம்.
பாருங்கள், ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பெயர் இருக்கிறது. “எய்ட்ஸ்” என்ற நோய் எவ்வளவு கொடுமையானது என்பதையும், அது ஒரு உயிர்க்கொல்லி என்பதையும் அறிகிறோம். ‘கேன்சர்’ என்பது ஒரு நோயின் பெயர். ‘ஆஸ்துமா’ ஒரு நோயின் பெயர். ஆனால் இயேசுவின் திருப்பெயர் இந்த நோய்களின் வல்லமைகளை எல்லாம் நீக்கி, சர்வாங்க சுகத்தைத் தரக்கூடிய வல்லமையுள்ள பெயராகும். அது சத்துருவினுடைய வல்லமைகளை அதமாக்கும் பெயராகும்.
“அவருடைய பெயரில், வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோர் யாவருடைய முழங்கால்களும் முடங்கும். நாவுகள் யாவும் அவர் கர்த்தர் என்று அறிக்கைபண்ணும்.” நோய்களும், வியாதிகளும் பாதாளத்திலிருந்தும், பிசாசினிடத்திலிருந்தும், நோய்க்கிருமிகளிடத்திலிருந்தும் வந்தாலும், கர்த்தர் அவைகள் எல்லாவற்றையும் அதமாக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
கர்த்தருடைய நாமம் எல்லா நோய்களையும் பெலவீனங்களையும் மேற்கொள்ள வல்லமையுள்ளது. கர்த்தருடைய நாமத்தில் அதிகாரமும், ஆளுகையும் உண்டு. கர்த்தருடைய நாமத்தில் சுகம் உண்டு. தேவபிள்ளைகளே, கர்த்தரிடத்திலே “இப்பொழுதே என்னை சுகமாக்கும்” என்று ஜெபித்து சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “என் நாமத்தினாலே …வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” (மாற்கு 16:17,18).