No products in the cart.
மார்ச் 13 – நிறைவாக்குவார்!
“என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலிப். 4:19).
குறைவில்லாத மனுஷன் ஒருவனுமில்லை. சிலருக்கு சரீரத்திலும், சிலருக்கு உள்ளத்திலும் குறைகள் இருப்பதுண்டு. சிலருக்கோ ஆவியிலே நிம்மதியில்லாத நிலைமை. பாவத்தின் நிமித்தம் குறைகளும் சாபங்களும் பூமியிலே பெருகிவிட்டன. ஏதேன் தோட்டத்தின் செழிப்பையும் பரிபூரணத்தையும் பாவம் காரணமாக மனுஷன் இழந்துவிட்டான். உணவுப் பற்றாக்குறை, ஞானக்குறைவு, சரீர ஆரோக்கிய குறைவு என்று எவ்வளவோ குறைவுகள் உலகத்தில் இருந்தாலும், கர்த்தர் குறைவுகளை நிறைவாக்குகிறவராயிருந்து, நிறைவையும் சம்பூரணத்தையும் தருகிறார்.
வேதம் சொல்லுகிறது, “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங். 34:10). சில மொழிபெயர்ப்புகளில் இந்த வசனமானது, ‘வலிமைமிக்கவர்களும், பலவான்களும், வறுமையினால் பட்டினியாய் இருப்பார்கள். ஆனால் தேவனுடைய பிள்ளைகளோ போஷிக்கப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உங்களை அழைத்தவர் யார்? உங்களை நடத்துகிறவர் யார்? உங்களுடைய மேய்ப்பனாய் இருக்கிறவர் யார்? வானாதி வானங்களை உண்டுபண்ணின கர்த்தர் அல்லவா? அவரையே நோக்கிப் பாருங்கள். தாவீது அவரையே நோக்கிப் பார்த்து சொல்லுகிறார், “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” (சங். 23:1).
உங்களுடைய வருமானம் குறைவாய் இருக்கிறதினால் குறைவுபட்டுப் போனதாக வருந்துகிறீர்களா? வருமானத்தைப் பெற்றுக்கொண்ட உடனேயே குடும்பமாக தேவ சமுகத்தில் வந்து ‘நல்ல மேய்ப்பரே, இதை ஆசீர்வதித்துத் தாரும்’ என்று ஊக்கமாக ஜெபியுங்கள். ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷித்த தேவன், நிச்சயமாய் உங்களையும் போஷிப்பார். வனாந்தரத்திலே மன்னாவைப் பொழிந்தருளி இருபது இலட்சம் இஸ்ரவேலருக்கு உணவளித்தவர் உங்களுக்கும் நிச்சயமாகவே உணவளிப்பார்.
அநேகர் குறைவுபடும்போது கர்த்தரை நோக்கிப் பார்க்காமல், யாரிடம் போய் கடன் வாங்கலாம் என்றும், எந்த பொருளைக் கொண்டுபோய் அடகு வைக்கலாம் என்பதிலுமேயே நோக்கமாய் இருக்கிறார்கள். இப்படி அவர்களுடைய எண்ணம் கடன் வாங்கும்படி போய்க்கொண்டு இருக்கிறவரையிலும், கர்த்தர் கடனுக்குத்தான் அவர்களை ஒப்புக்கொடுப்பார். ஆனால் எந்த ஒரு மனுஷன் உறுதியாக ‘கர்த்தரை நான் மேய்ப்பனாய் கொண்டிருக்கிறேன். எவ்வளவு குறைவு வந்தாலும் நான் கடனே வாங்கமாட்டேன்’ என்று தீர்மானிக்கிறானோ அவனுடைய வாழ்க்கையில் கர்த்தர் அற்புதத்தைச் செய்துகொண்டேயிருப்பார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் குறைவுபடும்போது, “சாறிபாத் விதவையின் மாவையும் எண்ணெயையும் ஆசீர்வதித்தீரே, என்னையும் ஆசீர்வதியும்” என்று கேளுங்கள். நீங்கள் அவரைத் தேடும்போது, அவர் தம்முடைய ஐசுவரியத்தின்படியே உங்கள் குறைவுகள் எல்லாவற்றையும் நிறைவாக்குவார்.
நினைவிற்கு:- “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4).