AppamAppam - Tamil

மார்ச் 02 – அருளுவார்!

“தேவனாகிய கர்த்தர் சூரியனும், கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும், மகிமையையும் அருளுவார்” (சங். 84:11).

கர்த்தர் மிகுந்த கிருபையுள்ளவர் மட்டுமல்ல, அவர் உங்களுக்கு கிருபையை அருளுகிறவராகவும் இருக்கிறார். அந்தக் கிருபை உங்களைச் சூழ்ந்துகொள்ளும். அந்தக் கிருபை தேவனுடைய மகிமையை உங்களுக்குள் கொண்டுவருகிறது. அந்தக் கிருபையே கேடகமாய் உங்களைப் பாதுகாக்கிறது.

நான் கிருபை என்ற வார்த்தையைக் குறித்து அதிகமாய் சிந்திப்பதுண்டு. பல வரைப்படங்களில் பரிசுத்தவான்களுடைய தலைக்குமேலாய் நீலநிறமான ஒளி மிகுந்த அழகிய வட்டம் இருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். கிருபை என்றால் அப்படி தெய்வீக ஒளி பொருந்திய நீலநிறமான பெரிய வட்டமாய் இருக்கும் என்றும், துதிக்கத் துதிக்க அந்த நீல வட்டம் அழகாகவும், பெரிதாகவும் மாறும் என்றும் கற்பனை செய்துகொள்ளுவேன்.

ஒரு மனிதனைவிட்டு தேவ கிருபை விலகும்போது, அந்த நீல நிறமான பாதுகாப்பின் வளையம் அவனைவிட்டு விலகிப்போய், சத்துருக்கள் அவனை எளிதில் மேற்கொள்ளுவதற்கு வழிவகுப்பதாகவும், அந்த கிருபைக்குள்ளே எப்பொழுதும் பாதுகாப்பாக பொதிந்துகொள்ளப்பட்டவனாய் வாழவேண்டுமென்றும் எண்ணிக் கொள்ளுவேன்.

ஆனால், வேதத்தை வாசிக்க வாசிக்க கிருபை என்பது தகுதியில்லாதவர்கள்மேல் கர்த்தர் பாராட்டுகிற தயவு, அன்பு, இரக்கம் என்பதைப் புரிந்துகொண்டேன். கர்த்தர் உங்கள்மேல் பரிதாபம் கொண்டு, கிருபையாய் எல்லா மேன்மைகளையும் கொடுத்திருக்கிறார்.

நீங்கள் இரட்சிப்பை உங்களுடைய சாதுரியத்தினால் பெற முடியாது. அது கர்த்தருடைய கிருபையின் ஈவு. பரிசுத்த ஆவியின் ஈவு. நித்திய ஜீவனை சுயபிரயாசத்தினால் சுதந்தரித்துக்கொள்ள முடியாது. அது கர்த்தர் தம்முடைய கல்வாரி அன்பினாலே உங்களுக்குக் கொடுத்த கிருபையின் ஈவு.

நீங்கள் நிற்கிறதும் அவருடைய கிருபை. நிர்மூலமாகாதிருக்கிறதும் அவருடைய கிருபை. இதுவரையிலும் பாதுகாக்கப்பட்டு, ஜீவனுள்ளோர் தேசத்திலே இருப்பதும் கர்த்தருடைய கிருபையேயாகும்.

அப். பவுல் தன்னைத் தாழ்த்தி, “ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன். ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது” (1 கொரி. 15:10) என்று சொல்லுகிறார்.

தேவபிள்ளைகளே, ஒருநாளும் என்னுடைய முயற்சி, என்னுடைய ஆற்றல் என்று பெருமைகொள்ளாதிருங்கள். என்னுடைய குலம், என் கோத்திரம், என் படிப்பு என்று சொல்லி மேன்மைப் பாராட்டாதேயுங்கள். உங்களைத் தாழ்த்தி, தேவ கிருபைக்குள் மறைந்துகொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் இன்னும் அதிகமான கிருபைகளைத் தந்து உங்களை உயர்த்துவார்.

நினைவிற்கு:- “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” (சங். 116:12,13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.