AppamAppam - Tamil

பிப்ரவரி 28 – இருமனம்!

“இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக்.1:8).

ஜெபிப்பதற்கு முன் உங்களுடைய மனதை ஒருமுகப்படுத்தவேண்டியதும், உங்களுடைய ஜெபத்திற்கு விரோதமாய் வருகிற எல்லாத் தடைகளையும் தீர்மானத்தோடு அப்புறப்படுத்த வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும். உங்களுக்குள் ஜெப உணர்வையும், ஜெபிப்பதற்கேற்ற சூழ்நிலையையும் நீங்கள் உருவாக்கத் தவறுவீர்களேயானால், நீங்கள் வல்லமையாய் ஜெபிக்க இயலாது.

ஒரு மிருகக்காட்சிசாலையில் ஒரு விநோதமான ஓணானை வைத்திருந்தார்கள். அந்த விநோதமான ஓணானைப் பார்ப்பதற்காக ஏராளமான ஜனங்கள் வந்தார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா? அந்த ஓணானுக்கு இரண்டு தலைகள் இருந்தன. இரண்டாவது தலை வால் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது. அதற்கு இரண்டு பக்கமும் கண்கள் இருந்தன. இரண்டு பக்கமும் வாய்கள் இருந்தன.

அந்த விநோதமான ஓணான் அநேகம் பேரை கவர்ந்து இழுத்தாலும், அதன் நிலை மிகவும் பரிதாபமாய் இருந்தது. அந்த ஓணான் ஓட முயலும் போது, அதனுடைய முன்னங்கால்கள் ஒரு திசையிலும், பின்னங்கால்கள் அதற்கு நேர் எதிர் திசையிலும் இயங்குகிறபடியால் அந்த ஓணானால் நகரக்கூட முடியவில்லை.

இப்படித்தான் அநேகம் பேர் ஜெப நேரத்தில் இரண்டு தலையுள்ள இந்த ஓணானைப் போல இருக்கிறார்கள். ஒரு பக்கம் தேவ பிரசன்னத்தை நாடுகிறார்கள். மறுபக்கம் உலக கவலைகளினால் நிரம்பியிருக்கிறார்கள். சிலருடைய சரீரம் தேவன் பக்கமாய்த் திரும்புகிறது. ஆனால், ஆத்துமாவோ அன்றைக்கு கவனிக்க வேண்டிய அலுவல்களை நோக்கித் திரும்புகிறது. ஒரு பக்கம் பரிசுத்த உணர்வு கொள்ளுகிறார்கள். மறுபக்கம் பாவம் செய்தவற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போஸ்தலனாகிய யாக்கோபு, “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்” (யாக். 1:8,7,6) என்று எழுதுகிறார்.

உங்கள் வாழ்க்கையிலே ஜெபத்திற்கு எவையெல்லாம் தடைகளாய் இருக்கின்றன? ஒருவேளை சூழ்நிலைகளால் வரும் தடைகளாயிருக்கலாம். அல்லது இருமனதினால் வரும் தடைகளாயிருக்கலாம். அல்லது பாவத்தினால் வரும் தடைகளாயிருக்கலாம். அல்லது குற்ற மனச்சாட்சி வாதிக்கிறதினால் வரும் தடைகளாயிருக்கலாம்.

தேவபிள்ளைகளே, எப்படிப்பட்ட தடைகளாயிருந்தாலும் இன்றைக்கு நீங்கள் அந்தத் தடைகளை தீர்மானத்தோடும், வைராக்கியத்தோடும் தகர்த்து எறியுங்கள். உங்கள் ஜெப ஜீவியத்திலே ஒருமனமாய் முன்னேறிச் செல்லுங்கள். இருமனமாய் இருப்பது ஒரு பலனையும் தராது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும், உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே, அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா. 59:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.