No products in the cart.
பிப்ரவரி 25 – நற்கந்தம்
“இரட்சக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்” (2 கொரி. 2:15).
நீங்கள் இந்த உலகத்துக்கு உப்பாக இருக்கிறீர்கள். வெளிச்சமாக, மலையின் மேல் இருக்கிற பட்டணமாக, கலங்கரை விளக்கமாக இருக்கிறீர்கள். மேலும், உலகத்திற்கு வாசனை வீசுகிற கிறிஸ்துவின் நற்கந்தமாகவும் இருக்கிறீர்கள்.
நீங்கள் கிறிஸ்துவுக்கு நற்கந்தமாக விளங்குகிறீர்களென்றால், அதனுடைய அர்த்தம் என்ன? கர்த்தருக்காக நீங்கள் வாழும் சாட்சியின் ஜீவியமே அந்த நற்கந்தம். உங்களுடைய வாழ்க்கை பரிசுத்தமுள்ளதும், மாசற்றதும், கறைதிரையற்றதுமாய் இருக்குமானால், உங்களைக் காண்கிறவர்கள் உங்கள் மூலமாய் கிறிஸ்துவைக் காண்பதற்கு அது வழியை ஏற்படுத்தும். இரட்சிக்கப்படுகிறதற்கு ஏதுவாயிருக்கும். கிறிஸ்துவின் மந்தைக்குள் வருவதற்கும் ஏதுவாய் இருக்கும்.
நற்கந்தத்துக்கு விளம்பரம் தேவை இல்லை. ‘நான் இங்கே இருக்கிறேன் வாருங்கள்’ என்று அது பிரபலப்படுத்திக்கொண்டிருப்பதுமில்லை. அது அமைதியாய் தன் வாசனையைப் பரிமளிக்கும்போது, அந்த நறுமணத்தால் அநேகர் இழுத்துக்கொள்ளப்படுவார்கள்.
ஒரு மலரின் நறுமணத்தை வெகு தூரத்திலிருந்தே முகர்ந்து, ஆயிரக்கணக்கான வண்டினங்கள், அதை நோக்கிப் பறந்து வரும். நீங்கள் கிறிஸ்துவுக்கென்று நற்கந்தமாய் ஜீவிப்பீர்களேயானால், உங்களுடைய வாய் பேசாவிட்டாலும், உங்கள் வாழ்க்கை அநேகரை கிறிஸ்துவின் அன்பை ருசிக்கும்படி இழுத்துக்கொண்டு வந்துவிடும்.
இன்று கிறிஸ்தவர்களைக் குறித்த துக்கமான காரியம் என்னவென்றால் அநேகர் நறுமணம் வீசுவதற்குப் பதிலாக துர்வாசனை வீசும் நிலையில் இருக்கிறார்கள். பொய், லஞ்சம், உண்மையற்ற நிலை, துன்மார்க்கம், விபச்சாரம் மற்றும் போதைப் பொருட்களில் சிக்கி, நற்சாட்சியை இழந்து, கர்த்தருடைய நாமம் புறஜாதிகள் மத்தியிலே தூஷிக்கப்படுவதற்கு இடங்கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் மூலமாய் அநேகர் இடறிப்போய்விடுகிறார்கள்.
‘கிறிஸ்தவனா இப்படிச் செய்கிறான்’ என்று புறஜாதியார் கிறிஸ்தவ மார்க்கத்தையே பழித்துப் பேசுகிறார்கள். நீங்கள் இரண்டு கண்களினால் மட்டும்தான் உலகத்தைப் பார்க்கிறீர்கள். ஆனால், உலகமோ உங்களை ஆயிரம் கண்களால் கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நற்கந்தமாய் இருக்கிறீர்களா அல்லது துர்வாசனை வீசுகிறீர்களா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஒவ்வொருநாளும் கர்த்தருடைய சமுகத்தில் உங்களை நிறுத்தி, “ஆண்டவரே நான் உமக்கென்று நற்கந்தமாய் வாசனை வீசுகிறேனா அல்லது என் மூலமாய் உம்முடைய நாமம் தூஷிக்கப்படத்தக்கதாக துர்வாசனையை வீசுகிறேனா?” என்று கேட்டு உங்களை ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு நிமிடமும் கர்த்தரை உயர்த்தி மேன்மைப்படுத்துங்கள்.
தேவபிள்ளைகளே, சாட்சியின் ஜீவியத்தை பரிசுத்தத்தோடும், தேவ பயத்தோடும் காத்துக்கொள்ளுவதன் மூலம் நற்கந்தம் வீசுபவர்களாக வாழுங்கள்.
நினைவிற்கு:- “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை *வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 2:14).