No products in the cart.
பிப்ரவரி 08 – தியானம்!
“நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்” (சங். 104:34).
ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தியானமானது ஒரு தலைசிறந்த பயிற்சியாகும். பக்தி முயற்சிகளில் இது ஒரு விசேஷமான பங்கு வகிக்கிறது. தாவீது தன் அனுபவத்திலிருந்து “நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிமையாய் இருக்கும்” என்று எழுதுகிறார். தேவ ஜனங்களுக்கு தியான ஜீவியம் மிகவும் இன்றியமையாததாகும். அந்த தியானம் உங்களுடைய சிந்தனையை செழிப்பானதாகவும், இளமையானதாகவும் மாற்றி வாழ்க்கையை வளப்படுத்துகிறது.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் அவனுடைய சிந்தையிலும், நினைவிலுமே அமைகின்றன என்பதை நீங்கள் மறந்துபோய்விடக் கூடாது. எவன் ஒருவன் கர்த்தரைக் குறித்து அதிகமாய் தியானிக்கவில்லையோ அவனுடைய எண்ணங்களில் சாத்தான் பல தீமையான விதைகளை விதைத்து, மாம்சீக எண்ணங்களைச் சிந்திக்க வைக்கிறான். பாவமுள்ள கற்பனா சக்திகளைக் கொண்டுவந்து இச்சைகளை நிறைவேற்றும்படி தூண்டிவிடுவான்.
வேதத்தில் காணப்படும் பரிசுத்தவான்கள் அனைவருமே வேதத்தை வாசித்து தியானம் செய்வதில் அதிக நேரத்தை செலவழித்தார்கள். ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியிலே போயிருந்தார் (ஆதி. 24:63 ) என்று வேதம் சொல்லுகிறது.
தாவீது தன் தியான அனுபவத்தைக் குறித்து எழுதும்போது, “உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்” (சங். 119:148) என்று கூறுகிறார். தியானமும், ஜெபமும் உங்களது ஆத்துமாவின் பெலனாய் இருக்கின்றன. தியானமானது தேவனோடு உங்களை இணைத்துக் கட்டிவிடுகிறது.
கானானைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு முன்பு, கர்த்தர் யோசுவாவுக்கு கொடுத்த ஒரு ஆலோசனை வேதத்தைத் தியானிக்க வேண்டும் என்பதுதான். கர்த்தர் சொன்னார், “இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8).
இந்த வசனத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். யோசுவாவுக்கு முன்னால் பல யுத்த களங்கள் இருந்தன. அவர் கானானிலுள்ள ஏழு ஜாதிகளையும், முப்பத்தோரு ராஜாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலை. அப்படிப்பட்ட அவருக்கு சரீர பெலன் அவசியம்தான்.
ஆனால் அதைப் பார்க்கிலும் அவருக்கு அதிக அவசியமாயிருந்தது உள்ளத்தில் வலிமையும், ஆன்மாவில் பலமும்தான். உள்ளான மனுஷனைப் பலப்படுத்த தியானமே பிரதானக் கருவியாய் இருக்கிறது. தேவபிள்ளைகளே, தியான வாழ்க்கை ஒரு ஆசீர்வாதத்தின் வாழ்க்கை என்பதை அறிந்து செயல்படுங்கள்.
நினைவிற்கு:- “என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்” (சங். 39:3).