No products in the cart.
பிப்ரவரி 05 – பயம்!
“பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்;…. நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக் கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்” (1 சாமு. 27:1).
தாவீதுக்கு சவுலைக்குறித்த ஒரு பயம் இருந்தது. ‘என்றாவது ஒரு நாள் நான் சவுலின் கையினால் மடிந்து போவேன். அவன் என்னைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடம் எனக்குத் தேவை. நான் உயிர்பிழைத்து வாழுவதற்கு ஒரு அடைக்கலம் தேவை’ என்று அவர் எண்ணினார்.
இன்றும் அநேக பரிசுத்தவான்களின் உள்ளத்தில் இருக்கும் பயம் இதுதான். நான் விழுந்து போவேனோ, நான் பாவம் செய்து தேவனுக்கு துரோகம் பண்ணி பின்வாங்கிப் போவேனோ, சாத்தானுடைய சோதனைகள் என்னை வழி விலகிப் போகச் செய்துவிடுமோ என்பவையே. இந்த பயம் ஏன் வருகிறது? பிசாசானவன் பாவிகளையும் துன்மார்க்கர்களையும் பின்தொடராமல், பரிசுத்தவான்களையே வேட்டையாட முற்படுவதே இதன் காரணம்.
ஏரோதுவின் மகள் நடனமாடித் தகப்பனை மகிழ்வித்தபோது, அந்த ராஜ்யத்தின் பாதியை அவள் கேட்கவில்லை. யோவான்ஸ்நானகனின் தலையைத்தான் கேட்டாள். காரணம், சாத்தானுக்கு பரிசுத்தவான்களின் தலைதான் தேவை. ஆகவேதான் அநேக தேவனுடைய பிள்ளைகளின் உள்ளத்தில் முற்றும் முடிய நிலைநிற்பேனோ அல்லது விழுந்து விடுவேனோ என்ற கலக்கம் ஏற்படுகிறது.
தாவீதுக்கு சவுலைப் பற்றிய பயம் அப்படித்தான் வந்தது. என்றாவது ஒரு நாள் சவுல் தன்னைக் கொன்றுவிடுவான் என்றும், தனக்குத் தப்புவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று எண்ணி பெலிஸ்திய தேசத்திற்குப் போனார். அங்கிருந்த புறஜாதி ராஜாவைப் பார்த்து, “உம்முடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்குமானால் நான் பிழைப்பதற்கும், வாசம் பண்ணுவதற்கும் ஒரு இடத்தைத் தாரும்” என்று கேட்டார்.
கர்த்தரிடத்திலேயே எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுப் பழகின தாவீது, இப்பொழுதோ ஆசீர்வாதத்தின் ஊற்றான கர்த்தரை விட்டுவிட்டு வெடிப்புள்ள தொட்டியான பெலிஸ்திய ராஜாவின் முன்னால் போய் நின்றது எத்தனை பரிதாபம்! பெலிஸ்திய ராஜா தாவீதுக்கு சிக்லாகு என்ற பட்டணத்தைக் கொடுத்தார். ஆனால் ஏராளமான வேதனைகள்தான் அங்கே தாவீதுக்கு வந்தன.
அதற்குப் பிறகு தாவீது செய்தது என்ன? நேராக கர்த்தரிடத்திற்குத் திரும்பினார். ‘கர்த்தாவே, யோர்தான் பட்டணங்களில் ஒன்றில் நான் போய் குடியிருக்கலாமா’ என்று விசாரித்தார். கர்த்தர் எபிரோனைக் கட்டளையிட்டார். எபிரோனில்தான் தாவீது ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார். எபிரோன் என்ற வார்த்தைக்கு “தோள்” என்று அர்த்தம். கர்த்தர் தம்முடைய தோள்களைக்கொண்டு தாவீதை ஏந்தினார், உயர்த்தினார், மேன்மைப்படுத்தினார்.
தேவபிள்ளைகளே, கலக்கங்களையும், போராட்டங்களையும் நீங்கள் சந்திக்கும்போது, மனுஷனுடைய தயவை நாடிப் போகாதிருங்கள். உபவாசத்தோடு கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து விடுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கும் ஒரு எபிரோனைக் காண்பித்து உயர்த்துவார்.
நினைவிற்கு:- “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங். 73:24).