AppamAppam - Tamil

ஜனவரி 28 – பூரண கிருபை!

“கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” (அப். 4:33).

நீங்கள் பூரணராகும்படி கடந்துபோக வேண்டுமென்றால், பூரண கிருபை வேண்டும். அப். பவுல் சொல்லுகிறார்: ‘நாம் இருப்பது கிருபை, ஜீவிப்பது கிருபை, சாட்சிக் கொடுப்பது கிருபை, ஊழியம் செய்வது கிருபை’. ஆதி அப்போஸ்தலர்கள் கர்த்தரைக் குறித்து பலமாய் சாட்சி கொடுத்து கிருபையின்மேல் கிருபைப் பெற்றார்கள். பூரணக் கிருபையிலே பெருகினார்கள். விசுவாசியானாலும் சரி, ஊழியக்காரரானாலும் சரி, ஒவ்வொருவருக்கும் பூரணக் கிருபை தேவை. கிருபையினால்தான் ஓட்டத்தை வெற்றிகரமாய் ஓட முடியும். கிருபையினால்தான் சிங்காசனம் ஸ்தாபிக்கப்பட முடியும்.

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஒரு பெலவீனம் இருந்தது. அந்த பெலவீனம் அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. அது அவரை ஒரு முள்ளாய்த் தைத்தது. அதைக் குறித்து ஜெபித்தபோது கர்த்தர் கொடுத்த பதில் என்ன தெரியுமா? ‘என் கிருபை உனக்குப் போதும்’ என்பதுதான். கிருபை இருக்கும்போது உங்களுடைய பெலவீனத்தில் தேவனுடைய பெலன் பூரணமாய் விளங்கும். நீங்கள் பெலவீனத்தில் பெலன்கொள்வீர்கள்.

யார் யார் தேவகிருபையின்மீது சார்ந்துகொள்ளாமல், தங்களுடைய சுயபெலத்தில் சார்ந்துகொள்ளுகிறார்களோ அவர்கள் தோல்வியடைகிறார்கள். அதே நேரத்தில், தங்களைத் தாழ்த்தி, தங்களில் ஒன்றுமில்லை என்று உணர்ந்து, முழுவதுமாக கர்த்தரிடத்தில் அர்ப்பணிக்கிறவர்கள், பூரண கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். நீங்கள் தேவனுடைய கிருபையிலே எப்போதும் சார்ந்துகொள்ள வேண்டும்.

அப். பவுல், “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2 கொரி. 9:8) என்று எழுதுகிறார். நீங்கள் கிருபையிலே பெருகி பூரணராக வேண்டுமென்றால் அதற்கு மூன்று முக்கியமான வழிகள் உண்டு.

முதலாவது அதிகாலையில் எழுந்து, முழங்காலில் நின்று, கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் காலைதோறும் தேவனுடைய கிருபைகள் புதிதாய் இருக்கின்றன (புலம். 3:23).

இரண்டாவது, நீங்கள் எப்போதும் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் தாழ்மையுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும். தாழ்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் கிருபை அளிக்கிறாரே (நீதி. 3:34).

மூன்றாவது, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தரை ஸ்தோத்தரித்து, துதித்து, மகிமைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களில் கிருபை பெருகும். வேதம் சொல்லுகிறது: கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும் (2 கொரி. 4:15).

தேவபிள்ளைகளே, கிருபையிலே பூரணப்படுவீர்களாக!

நினைவிற்கு: “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங். 90:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.