AppamAppam - Tamil

ஜனவரி 27 – பூரண மகிமை!

“ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்” (சங். 45:13).

உங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையானது மகிமையின்மேல் மகிமையடைந்து, பூரண மகிமையுள்ளதாய்த் திகழ வேண்டும். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, மகிமையின் ராஜாவாகிய அவர் உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார். மகிமையின் விதை உங்களுக்குள் வைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் சாயலில் நீங்கள் வளர வளர, உங்களுக்குள் வைக்கப்பட்ட மகிமையின் விதையும் பூரணத்தை நோக்கி வளருகிறது.

வேதம் சொல்லுகிறது, “…தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்” (ரோமர் 8:29). “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18).

தேவபிள்ளைகளே, மகிமையின்மேல் மகிமையடையும் நம்பிக்கை உங்களுக்குண்டு. அந்த நம்பிக்கையை நோக்கி விசுவாசத்தோடு முன்னேறிச் செல்லுங்கள். அந்தப் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது; அந்த பூரண மகிமையைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ராஜ குமாரத்தி எப்பொழுது உள்ளான பூரண மகிமையுடையவளாவாள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். வேதம் சொல்லுகிறது, “குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு” (சங். 45:10).

இதிலே ஒரு ஆழமான ஆவிக்குரிய இரகசியம் உண்டு. மணவாட்டியாகிய நீங்கள் பாவத்திற்கு மரிக்கும்போதுதான் பரிசுத்தத்தை கர்த்தரிடத்திலிருந்து எதிர்பார்க்க முடியும். பழைய பாவ வாழ்க்கை அழியும்போதுதான் மகிமையின் வாழ்க்கைக்குள் நீங்கள் பிரவேசிக்க முடியும். கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ’ என்று சொன்னார் (ஆதி. 12:1).

ஏன் அப்படி சொன்னார்? அப்பொழுதுதான் ஆபிரகாமால் கர்த்தரை முழுவதுமாய் சார்ந்துகொள்ள முடியும். தகப்பன் வீட்டையும், தாயின் வீட்டையும் மறந்தால்தான் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள முடியும். கர்த்தருடைய மகிமையின் பூரணத்திற்குள் கடந்து வர முடியும்.

அன்று கானானுக்குள் பிரவேசிக்க ஆபிரகாம் தகப்பன் வீட்டையும், தாயின் வீட்டையும் மறந்துவிடவேண்டியதாயிருந்தது. அதுபோலவே, பரம கானானாகிய மகிமையின் ராஜ்யத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க வேண்டுமென்றால், ஆதி தகப்பனாகிய உலகத்தின் அதிபதியையும் அவனுக்கு உண்டான யாவற்றையும் நீங்கள் வெறுத்துவிட வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுதுதான் நீங்கள் உள்ளான பூரண மகிமையை அடைய முடியும். தேவபிள்ளைகளே, மகிமையின்மேல் மகிமையடையவும், கர்த்தருடைய பர்வதத்தில் காணப்படவும் உங்களை முழுவதுமாய் ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது, கர்த்தர் மகிமையின் பாதையிலே உங்களை நடத்திச் செல்லுவார்.

நினைவிற்கு:- “தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்” (வெளி. 21:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.