AppamAppam - Tamil

ஜனவரி 26 – பூரண அன்பு!

“பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” (1 யோவான் 4:18).

நீங்கள் தேவனிடத்திலும், மற்றவர்களிடத்திலும் அன்புகூருவதில் பூரணப்பட்டிருக்க வேண்டும். பயங்கரமான மூர்க்க சுபாவமுள்ள கொலைகாரன் ஒருவன் இருந்தான். அவன் தன் எதிராளியைத் தாக்குமுன் அவன் மீது எச்சில் உமிழ்வான். தனக்குத்தானே ஒரு கோபவெறியை ஏற்படுத்திக்கொள்வான். பின்பு பயங்கரமாய் சத்தமிட்டு, தன் எதிராளியைப் பயந்து நடுங்கச் செய்து, அடித்து வீழ்த்துவான்.

ஒரு நாள் போலீசார் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அங்கே ஒரு போதகர் அவனைச் சந்தித்து கிறிஸ்துவின் அன்பை அவனுக்கு அருமையாய்ப் போதித்தார். ஆனால் அவனோ, அவரிடம் வெறுப்பையும், கசப்பையுமே காட்டினான். அவர் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சிரித்த முகத்தோடும், அன்பான வார்த்தைகளோடும் அவனைக் கிறிஸ்துவின் பக்கமாய்த் திருப்பினார்.

அந்த கொலைகாரன் இரட்சிக்கப்பட்டதும், தனக்குள் புதிதாக வந்து வாசம் பண்ணும் கிறிஸ்து எவ்வளவு அன்புள்ளவர் என்பதைக் கண்டுகொண்டான். தானும் அந்த அன்பில் பூரணப்பட விரும்பினான். ஆகவே அவன் இரவு வேளைகளில், ஆண்டவரிடம் அன்போடு “ஆண்டவரே, உம்மை நான் மிகவும் நேசிக்கிறேன்; மிகவும் அன்பு செலுத்துகிறேன்” என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.

பின்பு, அவன் யார் யார் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்பினானோ, அவர்கள் திசையாய்த் தன் உள்ளத்திலிருந்து அன்பின் வாய்க்காலை அமைத்து அவர்களுடைய உள்ளத்தோடு இணைக்கத் துவங்கினான். பின்பு கிறிஸ்துவின் அன்பை அவர்களை நோக்கி பாயச்செய்தான். “சகோதரனே, இயேசு உன்னை மிகவும் நேசிக்கிறார். உன்மேல் அன்பு செலுத்தி உனக்காக ஜீவனைக் கொடுத்தார். இயேசுவைப் போல உன்னை நேசிக்க ஒருவருமில்லை” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். இந்த முயற்சி அநேக ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்தியது.

வேதம் சொல்லுகிறது, “தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்” (1 யோவான் 4:12). அன்பில் நீங்கள் பூரணப்பட்டு, அந்த இலக்கை நோக்கி முன்னேறுகிறவர்களாயிருக்க வேண்டும். பரிசுத்தத்தையும், அன்பையும் வேதம் மிகவும் அதிகமாய் வலியுறுத்துகிறது. ஆகவே, நீங்கள் பரிசுத்தத்தில் மட்டும் பூரணப்பட்டால் போதாது. தேவ அன்பும் உங்கள் மூலமாக வெளிப்பட வேண்டும்.

இயேசு சொன்னார், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மாற். 12:30, 31). தேவபிள்ளைகளே, அன்பின் சொரூபியான கிறிஸ்து வரும்போது, அன்பில் பூரணப்பட்டவர்கள் மகிழ்ச்சியோடு அவருக்கு எதிர்கொண்டு போவார்கள் என்பது நிச்சயம்.

நினைவிற்கு:- “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்” (யூதா 1:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.