No products in the cart.
ஜனவரி 21 – பூரண அழகு!
“பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்” (சங். 50:2).
பூரணத்தை நோக்கிச் செல்லும்போது உங்களிலே “பூரண அழகு” காணப்பட வேண்டும். அது ஒரு தெய்வீக அழகு. அது கிறிஸ்துவின் சாயல். உங்களைக் காண்கிறவர்கள் கிறிஸ்துவைக் காணும்படி கிறிஸ்துவின் அழகிலே நீங்கள் பூரணப்பட வேண்டும். இங்கு அழகு என்னும் சொல் உள்ளான அழகைக் குறிக்கிறது. அழகு சாதனங்களால் ஏற்படக்கூடிய வெளிப்புற அழகு அல்ல, உள்ளான அழகே முக்கியமானது.
அப்போஸ்தலனாகிய பேதுரு, “…புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” (1பேதுரு 3:3, 4) என்று குறிப்பிடுகிறார்.
“சாந்தமும் அமைதலும் உள்ள ஆவியை” தேவபிள்ளைகள் வாஞ்சிக்க வேண்டும். அமைதியிலே ஒரு தெய்வீக அழகு உண்டு. இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் வாய் திறவாத ஆட்டைப்போல இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது. அமைதியாய் இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாய் இருப்பதே நல்லது.
விபச்சார ஸ்திரீயை ஜனங்கள் கல்லெறியக் கொண்டு வந்து மூர்க்கமாய் நின்றபோது இயேசு அமைதியாயிருந்தார். அவர்கள் திரும்பத் திரும்ப அலட்டிக் கேட்டபோது ‘உங்களில் பாவம் இல்லாமல் இருக்கிறவன் முதலில் கல்லெறியக் கடவன்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அவர் அமைதியாகி விட்டார். இந்த அமைதியானது வல்லமையுள்ள ஒரு அழகு ஆகும். இனிமையான ஒரு அழகு. அது விபச்சார ஸ்திரீயையும் பாதுகாக்கக்கூடிய கிருபையுள்ள அழகாய் இருந்தது.
சிலர் எப்போது பார்த்தாலும் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டேயிருப்பார்கள். வாயையும் உதட்டையும் அவர்களால் அடக்கவே முடியாது. சொற்கள் மிகுதியாகும்போது அங்கே பாவம் இல்லாமல் போகாது. நீங்கள் சாந்தத்தோடு அமைதியாய் இருக்கும் கிருபையை கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் அழகிலே பூரணப்பட கிறிஸ்துவின் குணாதிசயங்களை தியானித்துப் பாருங்கள். “அவர் முற்றிலும் அழகுள்ளவர்” (உன். 5:16) என்று வேதம் சொல்லுகிறது. கிறிஸ்துவின் மணவாட்டியாய் மாற வேண்டிய நீங்களும்கூட பூரண அழகை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். “சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?” (உன். 6:10) என்று வேதம் கேட்கிறது.
தேவபிள்ளைகளே, அதிக நேரம் தேவசமுகத்திலே காத்திருந்து ஜெபிக்கும்போது கர்த்தருடைய அழகும், பிரகாசமும் உங்களிலும் பிரதிபலிக்கும். விசேஷமான பரிசுத்த அழகு உங்களிலே காணப்படும். அப்பொழுது கர்த்தர் உங்களைப் பார்த்து ‘நீ பூரண ரூபவதி. உன்னிலே பழுதொன்றும் இல்லை’ என்று சொல்லி மகிழ்ந்து களிகூருவார்.
நினைவிற்கு:- “மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்” (உன். 7:6).
