No products in the cart.
ஜனவரி 02 – புதிய நாட்கள்!
“கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” (புலம். 5:21).
எங்கள் நாட்களை புதியவைகளாக்கும் என்பதே எரேமியாவின் ஜெபமாயிருந்தது. தங்கள் நாட்களை சாதாரண புதிய நாட்களாக அல்லாமல் பூர்வகாலத்தில் இருந்ததுபோல புதியவைகளாக்கும் என்று ஜெபிக்கிறார்.
அந்த நாட்களின் அனுபவத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்களும் அனுபவித்தால் எவ்வளவு அருமையாய் இருக்கும்! பூர்வத்திலிருந்த அந்த நாட்களை நினைத்துப் பாருங்கள். அவை கர்த்தர் மனிதனைத் தேடி பூமிக்கு இறங்கி வந்த நாட்கள்; பகலின் குளிர்ச்சியான வேளையிலே, மனிதனோடு உலாவின நாட்கள்; தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஆழமான உறவும் ஐக்கியமும் இருந்த நாட்கள்; மனிதன் நித்தமும் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருந்த நாட்கள்.
ஒரு வாலிப சகோதரனுக்கு, நல்ல பெற்றோர் மற்றும் அன்பான சகோதர, சகோதரிகளுடன்கூடிய அருமையான ஒரு குடும்பம் இருந்தது. அவன் இளமையில் பக்தியுள்ளவனாகவும், தேவனோடு ஐக்கியமுள்ளவனாகவும் வாழ்ந்தான். ஆனால், வாலிப வயதிலோ அவனுடைய நண்பர்களால் பாவ வழிகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டான். உலகத்தின் உல்லாசங்களை மிக அதிகமாகச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அவனைக் கொடிய நோய் ஒன்று பற்றிக்கொண்டது. வயிற்றிலுள்ள குடல் முழுவதும் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. மரணத்தருவாய்க்குள் வந்தபோதுதான் அவன் தன்னுடைய நிலையை உணர்ந்தான். ‘ஆண்டவரே, என் நாட்களை பூர்வத்திலிருந்ததுபோல புதிதாக்கும்’ என்று கதறி அழுதான்.
அப்போது, கர்த்தருடைய ஊழியக்காரர் ஒருவர், “குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்” (எரே. 18:4) என்ற வசனத்தை அவனுக்கு வாசித்துக் காண்பித்து, அவனுக்காக ஜெபித்தார். ஜெபித்தபடியே, பரமகுயவன் மீண்டும் அவனுடைய வாழ்க்கையையும், சரீரத்தையும் புதிதாக வனைந்து தெய்வீக சுகத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.
கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற எல்லா நாட்களும் கிருபையின் தருணங்கள் ஆகும். எவ்வளவோபேர் கொரோனா நோயின் பாதிப்பால் ஜீவனுள்ளோர் தேசத்திலிருந்து கடந்து போய்விட்டார்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி, மகிமைப்படுத்தி, அவருக்காகப் புதிய வாழ்க்கை வாழும்படி அமைக்கப்பட்ட பொன்னான தருணமாகும்.
ஆதியிலே பூமியானது, ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தபோது கர்த்தர், எல்லாவற்றையும் புதிதாக்கும்படிச் சித்தமானார். பாவங்களால் மனிதன் தேவனுடைய அன்பையும், ஐக்கியத்தையும் இழந்தபோது கர்த்தர், மீண்டும் பூர்வ நாட்களைத் தரும்படி மனதுருக்கமுடையவராய் பூமியிலே இறங்கி வந்தார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலும் எல்லாவற்றையும் புதிதாக்கி புதிய நாட்களை கட்டளையிட்டு உங்களை ஆசீர்வதிப்பாராக!
நினைவிற்கு:- “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” (2 பேது.3:13).