No products in the cart.
டிசம்பர் 30 – கர்த்தர் தரும் சமாதானத்தின் வழியிலே!
“நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது” (லூக்.1:79).
கர்த்தருடைய பாதைகளெல்லாம் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்தவை. தேவபிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் மூன்று காரியங்களிலே சமாதானம் தேவை. முதலாவது பிதாவோடு சமாதானம். இரண்டாவது, மனுஷரிடத்தில் சமாதானம், மூன்றாவது தனக்குள் சமாதானம்.
முதலாவது பிதாவோடு சமாதானம் தேவை. வேதம் சொல்லுகிறது, “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1).
இரண்டாவது, மனுஷரிடத்தில் சமாதானம் தேவை. உங்களுக்கு யார் மீதாவது கசப்புகள், வைராக்கியங்கள் இருக்குமென்றால், அவற்றை மறந்து, அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, நல்மனம் பொருந்தி, சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிசாசைத் தவிர உங்களுக்கு பகைவர் ஒருவருமில்லை.
இயேசு சமாதானப்பிரபு (ஏசா. 9:6), சமாதான கர்த்தர் (ஆதி. 49:10), சமாதான காரணர் (மீகா. 5:5). வேதம் சொல்லுகிறது, “அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்” (எபே.2:14-16).
மூன்றாவதாக, உங்களுக்குள்ளே சமாதானம் தேவை. சிலரை குற்ற மனச்சாட்சி இரவும் பகலும் வாதித்துக்கொண்டேயிருக்கும். இதனால் மனதிலே சமாதானமிராது. சிலர் தங்களைத் தாங்களே மன்னிக்கமாட்டார்கள். நான் இப்படி நடந்திருக்கக் கூடாது, இப்படி பேசியிருந்திருக்கக்கூடாது, நான்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று இரவு பகலாக தங்களையே நொந்து கொண்டிருப்பார்கள். கடந்த கால நிகழ்ச்சிகள், கடந்த கால பாவங்களுக்காகக் கண்ணீர் சிந்தி ஜெபித்தபின்பு, கர்த்தர் எனக்கு மன்னித்து விட்டார் என்ற பெரிய விசுவாசம் வர வேண்டும். அப்பொழுதுதான் கர்த்தர் உலகம் கொடுக்கவும் எடுக்கவும் கூடாத பெரிய சமாதானத்தால் உங்களை நிரப்பியருளுவார்.
இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27). தேவபிள்ளைகளே, கர்த்தர் சமாதானத்தை உங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் நல்ல மேய்ப்பராயிருந்து நித்தமும் உங்களை நடத்துவார். மட்டுமல்ல, உங்களுடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்துவார்.
நினைவிற்கு:- “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).