No products in the cart.
டிசம்பர் 05 – கர்த்தருடைய பாதுகாப்பு!
“இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்” (சங். 91:6).
91-ஆம் சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமும் கர்த்தருடைய பாதுகாப்பு எவ்வளவு பெரிதானது என்பதை வெளிப்படுத்துகிறது. கர்த்தர் உங்கள்மேல் எவ்வளவாய் அன்பு வைத்து மனதுருக்கத்தோடு தன் செட்டைகளை விரித்து உங்களைக் காக்கிறார் என்பதைத் தெரியப்படுத்துகிறது. ஆகவே, “கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்” (சங். 17:8) என்று ஊக்கமாய் ஜெபியுங்கள்.
இந்த சங்கீதத்தில் 5 மற்றும் 6-ஆம் வசனங்களில் இரவைக் குறித்தும் பகலைக் குறித்தும் சங்கீதக்காரன் பேசுகிறார். இரவில் பயங்கரங்கள் உண்டாகிறதாகவும், கொள்ளை நோய்கள் நடமாடுவதாகவும் கூறும் அவர், பகலில் அம்புகள் பறக்கின்றதாகவும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரங்கள் இருக்கிறதாகவும் கூறுகிறார்.
கர்த்தரே பகலையும் இரவையும் உண்டாக்கினவர் (ஆதி. 1:5). பகலுக்கும் அவர் தேவனாக இருக்கிறார், இரவுக்கும் அவரே தேவனாக இருக்கிறார். பகலை நீங்கள் உழைப்பதற்காக சிருஷ்டித்தார், இரவை உங்களுடைய இளைப்பாறுதலுக்காக சிருஷ்டித்தார். அவரே நம்மை பகலின் பயங்கரத்துக்கும், கொள்ளை நோய்க்கும், இரவில் பறக்கும் அம்புகளுக்கும், பாழாக்கும் சங்காரங்களுக்கும் விலக்கிப் பாதுகாக்கிறார். பகலுக்கும் சூரிய வெளிச்சத்தை வைத்தார். இரவுக்கு சந்திர நட்சத்திர வெளிச்சங்களை வைத்தார். ஆனால், தேவனுடைய பிள்ளைகள் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு. இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்க வேண்டும் (சங். 1:2) என்பதே அது.
வாழ்க்கையிலே உயர வேண்டுமென்று விரும்பின யாக்கோபு, இரவும் பகலும் உழைத்தார். தன்னுடைய மனைவிமாருக்காகவும்,- சமுதாயத்திற்காகவும், தன்னுடைய மந்தைகளைப் பாதுகாப்பதற்காகவும் உழைத்தார். அவர் தன் அனுபவத்தை எழுதும் போது, “பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்” (ஆதி. 31:40) என்றார். ஆனாலும் கர்த்தர் யாக்கோபுக்கு நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து, சந்தோஷத்தோடு தகப்பனுடைய வீட்டிற்குத் திரும்பி வரும்படி உதவி செய்தார். அந்தக் கர்த்தர் உங்களையும் பாதுகாப்பார்.
யோசுவா யுத்தக்களத்திலே நின்றபோது, இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. சூரியன் அஸ்தமிக்கிற நேரம் வந்தது. ஆனால் யோசுவாவோ, உன்னதமானவரின் பட்சத்தில் நின்றபடியினால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் அதிகாரத்தோடு அவரால் கட்டளையிட முடிந்தது. “சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள்” என்று அவர் சொன்னபோது, அப்படியே அவை தரித்து நின்றன. தேவ ஜனங்களுக்கு கர்த்தர் பெரிய ஜெயத்தைக் கட்டளையிட்டார்.
ஆம், நம் அருமைக் கர்த்தர் பகலுக்கும் ஆண்டவர், இரவுக்கும் ஆண்டவர், அவர் சூரியனையும் சிருஷ்டித்தார், சந்திரனையும் சிருஷ்டித்தார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடிருக்கிறபடியால், நீங்கள் எந்த ஆபத்து குறித்தும் கலங்க வேண்டியதில்லை.
நினைவிற்கு:- “நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்” (நீதி. 3:24).