AppamAppam - Tamil

நவம்பர் 09 – மன்றாடினோம்

“கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்” (எண். 20:16).

உங்கள் ஜெபத்தில் விண்ணப்பமும், துதி ஸ்தோத்திரமும் இருக்கையில், மன்றாட்டையும் அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். மன்றாட்டின் ஜெபம் மகா வல்லமையுள்ளது. அது சாதாரண ஜெபத்தைவிட மிக ஆழமானது, மேன்மையானது. எரேமியா தீர்க்கதரிசி அந்த மன்றாட்டு ஊழியத்தை செய்யும்வகையில் கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நடுவிலே நின்றார்.

இன்றைக்கும்கூட நீங்கள் பிரச்சனை உள்ள மக்களுக்காகவும், போராட்டமான சூழ்நிலை மாறவும், தேவ சமுகத்திலே நின்று மன்றாடக் கற்றுக்கொள்ள வேண்டும். கர்த்தர் சொல்லுகிறார், “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசே. 22:30).

மன்றாட்டின் ஜெபத்திற்கு நிச்சயமாகவே பதில் உண்டு. உங்களுடைய பிள்ளைகளுக்காகவும், குடும்ப ஐக்கியத்திற்காகவும், சபைக்காகவும், தேசத்துக்காகவும் உபவாசமிருந்து மன்றாடுங்கள். உங்களுடைய கண்ணீரின் மன்றாட்டைக் கர்த்தர் புறக்கணித்து கடந்து போகவே மாட்டார். வேதத்திலே, உலகப்பிரகாரமான ஒரு ராஜா எஸ்தரைப் பார்த்து, “உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்” (எஸ்தர் 5:6). என்று வாக்குக்கொடுத்து நிறைவேற்றுவாரானால் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்து உங்களுடைய மன்றாட்டை எவ்வளவு கருத்தாய் விசாரித்து உங்களுக்கு பதிலளிப்பார்!

ஜனங்களுக்காகவும், சபைக்காகவும், தேசத்திற்காகவும் மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுப்பதற்கு உங்களுடைய உள்ளத்திலே மனதுருக்கம் இருப்பது மிகவும் அவசியம். இயேசுகிறிஸ்து மனதுருகி அற்புதங்களைச் செய்தார். மனதுருகிப் பரிந்து பேசினார். மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுத்தார் (யோவான் 17-ம் அதிகாரம்). கிறிஸ்துவின் மனதுருக்கம் உங்களுடைய உள்ளத்தை நிரப்பும்போது நீங்கள் மன்றாட்டு ஜெபவீரர்களாய் மாறுவீர்கள்.

நீங்கள் மன்றாடி ஜெபிக்கும்போது, இயேசுவும் உங்களுடைய அருகிலே நின்று, உங்கள் ஜெபங்களைப் பிதாவுக்குத் தெரிவிக்கிறார். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி.4:15).

மன்றாட்டு ஊழியத்தைச் செய்கிறவர்கள் சோர்ந்துபோகவேகூடாது. விடா முயற்சியோடு இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும் (1 தெச. 5:17). சில வேளைகளில் கர்த்தருடைய பதில்களைப் பெறுவது தாமதமாகக்கூடும். ஆயினும் ஜெபத்தை விட்டுவிடாதிருங்கள். தாமதமானாலும் கர்த்தர் நிச்சயமாகவே பதிலளிப்பார். தேவபிள்ளைகளே, உங்கள்மேல் மனதுருகி பரிதாபம்கொள்ளும் கர்த்தர் ஜீவனோடிருக்கிறார். அவரும் மன்றாட்டு வீரர் அல்லவா? உங்களுக்குத் துணை செய்யாமல் இருப்பாரோ?

நினைவிற்கு:- “பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்” (1 சாமு. 7:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.