AppamAppam - Tamil

நவம்பர் 06 – மனந்திரும்புதலில் உயர்வு!

“…மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்” (லூக். 15:7).

ஒரு மனுஷன் பாவ வழியிலிருந்து விடுபட்டு கர்த்தரண்டை திரும்பி வரும்போது, முழுப் பரலோகமும் விழாக்கோலமாகிவிடுகிறது. தேவதூதர்கள் மத்தியிலே களிப்பும், சந்தோஷமும் உண்டாகிறது. கர்த்தருடைய மகிழ்ச்சிக்கோ அளவேயில்லை.

மேலும், மனந்திரும்புகிற அந்த தேவபிள்ளையினுடைய வாழ்க்கையில் கர்த்தர் மிகுந்த உயர்வைத் தருகிறார். வேதம் சொல்லுகிறது, “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்” (1 சாமு. 2:8). எப்படி உயர்த்துகிறார்? எவ்வளவு உயர்த்துகிறார்? அந்த மனுஷனை தம்முடைய சிங்காசனத்திற்கு உயர்த்துகிறார். தம்மோடு வீற்றிருக்கச் செய்யும்படி உயர்த்துகிறார். உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நிரப்புகிறார்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிற வேளையிலும், தன்னோடுகூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் மனந்திரும்பி தன்னண்டை திரும்பினதைக் கண்டார். பாடு அனுபவித்துக்கொண்டிருக்கிற அந்த வேளையிலும் மனம் திரும்பின அவனை உயர்த்தும்படி இயேசு சித்தமானார். எவ்வளவு உயர்த்தினார்? பாதாளத்திலிருந்து பரதீசிக்கு உயர்த்தினார். அவன் மனந்திரும்பாமல் மரித்திருப்பானென்றால், பாதாளத்திற்குள்தான் சென்றிருந்திருப்பான்.

துறைமுகங்களிலே பெரிய கிரேன் வேலை செய்வதை பார்த்திருப்பீர்கள். அது தன்னுடைய பெரிய கைகளை நீட்டி, கப்பலிலுள்ள சரக்கை எடுத்து, அப்படியே மிகவும் உயர்த்தி, வெளியே கொண்டுவந்து வைக்கிறது. அதுபோலத்தான் மனந்திரும்புகிற ஒரு மனுஷனை தூசியினின்றும், குப்பையினின்றும், புழுதியினின்றும், பாதாளத்தினின்றும் எடுத்து உயர்த்தி, தம்முடைய சிங்காசனத்தில் தம்மோடுகூட உட்காரும்படி கர்த்தர் அருள் செய்கிறார்.

கெட்டகுமாரனுடைய நிலை அவன் மனந்திரும்பியவுடன் எவ்வளவு மாறியது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அதற்கு முன்பாக அவன் உண்ண உணவின்றி, உடுக்க வஸ்திரமின்றி, பன்றிகளின் நடுவிலே கிடந்து, பன்றிகளுக்குரிய தவிட்டினால் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். அவன் மனசாட்சி அவனை வாதித்திருந்திருக்கும். எத்தனை கேவலமான நிலைமை! எத்தனை பரிதாபமான வாழ்க்கை!

ஆனால் மனந்திரும்பி அவன் தகப்பனண்டை வந்தபோது எத்தனை மாறுதல் பாருங்கள். அவனது தகப்பன் அவனை அன்போடு அணைத்து கழுத்தைக் கட்டி முத்தமிட்டான். அவனது வீடே வாத்தியங்களினாலும் நடனக் களிப்பினாலும் நிரம்பியது. நடனக் களிப்பினாலும் சந்தோஷத்தினாலும் நிரம்பியிருக்கிற அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிற அந்த இளையக் குமாரனை நோக்கிப் பாருங்கள். பன்றிகளின் மத்தியில் உட்கார்ந்திருந்த அவனது வாழ்க்கையில் திடீரென்று அப்படிப்பட்ட பெரிய உயர்வு அவன் மனம்திரும்பியதால் ஏற்பட்டது.

தேவபிள்ளைகளே, மனந்திரும்பி வந்த அந்த மைந்தனை தகப்பன் அரவணைத்து, அன்றைக்கு அவனை எவ்வளவு உயர்த்தினாரோ அதற்கும் அதிகமாய் கர்த்தர் உங்களை உயர்த்துவார். மனந்திரும்பி அவரண்டை வருவீர்களா?

நினைவிற்கு:- “காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே” (லூக். 15:32).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.