No products in the cart.
அக்டோபர் 01 – கனியும், விதையும்!
“…பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:11).
கனிக்குள் விதை மறைந்திருக்கிறது. அந்த விதைக்குள் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவன் புதிய மரங்களை முளைப்பிக்கக்கூடிய வல்லமை உடையதாய் இருக்கிறது. கனிகள் இல்லாவிட்டால் விதைகளும் இல்லை என்பது போல, கனி கொடாத விசுவாசிகளால் ஆத்தும ஆதாயம் செய்ய முடியாது.
மரங்கள் கனிகளைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில், அந்த கனிகளின் மூலமாய் விதைகளைப் பிறப்பித்து, தங்கள் ஜாதி மரங்களை இனவிருத்திச் செய்யவும் முற்படுகின்றன. பறவைகளைக் கவருவதற்கு, அந்த கனிகளில் அழகிய நிறத்தையும், மணத்தையும், சுவையையும் வைத்ததுடன், உள்ளே கெட்டியான விதைகளையும் வைத்திருப்பதால், அதன் மூலம் விதைகள் பல இடங்களுக்கும் பரப்பப்பட்டு அந்த மரம் நூறாக, ஆயிரமாக பெருகி பூமியை நிரப்புகின்றது. விதையே இல்லாமல் வெறும் கனியை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தால், அந்த மரம் பெருக வாய்ப்பே இருக்காது.
கனி கொடுக்கும் விசுவாசிகளே, உங்களிலே ஆத்தும ஆதாய விதை உண்டா? நீங்கள் நல்ல கிறிஸ்தவன் என்று பெயரைப் பெற்றால் மட்டும் போதாது. ஆத்தும ஆதாயம் செய்யும் கிறிஸ்தவனாகவும் விளங்க வேண்டும். ஒவ்வொரு தனி நபரும், ஆத்தும ஆதாயம் செய்கிறவராய் மாறவேண்டும். ஒவ்வொரு குடும்பமும் மிஷனெரி குடும்பமாக தீவிரமாக ஊழியம் செய்ய வேண்டும்.
மீண்டும் அந்த கனிகளையும், விதைகளையும் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிறு விதைக்குள் பெரிய மரத்தின் குணாதிசயங்கள் அனைத்தும் அடங்கி இருக்கின்றன. அந்த மரத்தின் இலைகள், பூக்கள், பழங்கள், இன்னும் மற்ற எல்லா சுபாவங்களும் அந்த சிறிய விதைக்குள் பொருந்தி இருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம்! ஒரு சிறிய பாட்டிலுக்குள் மலை போன்ற பெரிய இராட்சதன் உறங்கிக் கிடப்பதைப் போல அந்த விதைக்குள் பெரிய மரங்கள் அடங்கியிருக்கின்றன.
ஒவ்வொரு விதைக்குள்ளும் ஜீவன் இருக்கிறது. அந்த விதை வேரூன்றி வளருவதற்குத் தேவையான உணவும் அதற்குள் இருக்கிறது. உள்ளே இருக்கும் இளம் குருத்து பாதுகாக்கப்படும்படி அந்த விதையை சுற்றிலும் கடினமான ஓடு காணப்படுகிறது. கர்த்தர் எத்தனை ஞானமாய் அதை சிருஷ்டித்திருக்கிறார்!
வேதம் சொல்லுகிறது, “பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்” (மத். 13:31,32).
கர்த்தருடைய பிள்ளைகளுக்குள் இருக்க வேண்டிய ஜீவ விதைகள் தேவனுடைய வசனமே (லூக். 8:11). வசன விதைகளை விதைக்கும்போது, ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்படுகிறார்கள். கிறிஸ்து அவர்கள் வாழ்க்கையில் முளைத்து எழும்புகிறார். தேவபிள்ளைகளே, உங்கள் ஊழியத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், வேத வசனங்களை அப்பியாசப்படுத்துங்கள். அதுவே நல்ல பலனைத் தரும்.
நினைவிற்கு:- “சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது” (லூக். 8:8).