Appam, Appam - Tamil

ஜூன் 01 – சகல ஆறுதல்!

“இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 1:3).

நம் தேவன் சகல ஆறுதலின் தேவன். நம்முடைய உள்ளத்தைக் கிருபையினாலும், தேவ பிரசன்னத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்பி,  ஆசீர்வதிக்கிற தேவன். வேதத்தில் அவருக்கு, “சகலவிதமான ஆறுதலின் தேவன்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

ஒருவேளை உங்களுடைய முழுக்குடும்பத்தாரும் உங்களுக்கு விரோதமாய் எதிர்த்து நிற்கக்கூடும். போராட்டத்தின் மேல் பேராட்டம் வந்துகொண்டிருக்கக்கூடும். ஆனால் அவைகள் எல்லாமே குறிப்பிட்ட  காலத்திற்குத்தான் என்பதை மறந்துபோகாதிருங்கள்.  கர்த்தர் அந்தப் போராட்டத்தை முடிவுறச்செய்து ஆறுதலையும், தேறுதலையும் கொண்டுவருவார். அவர்  இரக்கங்களின் பிதா, சகல ஆறுதலின் தேவன்.

வேதத்திலே, அப். பவுல் தேவனால் ஆறுதல் அடைந்ததோடல்லாமல், மற்றவர்களை ஆறுதல்படுத்த திராணியுள்ளவராயும் மாறினார். அவர் “தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரி. 1:4) என்றார்.

“ஆறுதல்’ என்ற வார்த்தை, இரக்கம் பாராட்டுவதை, தேற்றுவதை, திடப்படுத்துவதைக் குறிக்கிறது. அந்த இரக்கத்தையும், தேறுதலையும், திடப்படுத்துதலையும் கர்த்தர் உங்களுக்குள்  வைத்திருக்கிறார். கர்த்தரால் எப்போதும் தேற்றப்பட்ட தாவீது, கர்த்தரை நன்றியோடு நோக்கிப் பார்த்து, “என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது” (சங். 94:19) என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார்

உங்களுடைய வாழ்க்கையில், எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ பலவிதமான விசாரங்களும், கவலைகளும் பெருகியிருக்கலாம். பாவத்தினிமித்தமும், அக்கிரமத்தினிமித்தமும் மனசாட்சி உங்களை வாதித்துக்கொண்டிருக்கலாம். குற்ற உணர்வு உங்கள் உள்ளத்தைப் பிழியலாம்.  அந்த நேரங்களிலெல்லாம்  கல்வாரி சிலுவையண்டை வந்து நின்று, உங்களுக்காகப் பாவநிவாரண பலியாக மரித்த இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள்.  அப்@பாது தெய்வீக சமாதானம் உங்கள் இருதயத்தை முழுவதுமாக நிரப்பும்.

லூக்கா 7-ம் அதிகாரத்தில், பாவத்தில் விழுந்த ஒரு ஸ்திரீ இயேசுவினுடைய பாதத்தண்டை வந்து, விழுந்து, மனங்கசந்து, அழுதாள். அவருடைய பாதத்தில் தன் கண்ணீரைச் சிந்தினாள். பரிமளதைலத்தைப் பூசினாள். இயேசு அவளை அன்போடு நோக்கிப் பார்த்து, மகளே, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.. சமாதானத்தோடே போ என்றார்” (லூக்கா 7:48,50).

தேவபிள்ளைகளே, அப்படிபட்ட கிறிஸ்து உங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். உங்களையும் ஆற்றித்தேற்றுவார்.

நினைவிற்கு:- “ஆறுதலடையுங்கள், ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள்; அப்பொழுது அன்புக்கும், சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்” (2 கொரி. 13:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.