No products in the cart.
மே 31 – இருமனம்!
“இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக். 1:8).
கர்த்தரிடத்தில் ஜெபிப்பதற்கு நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தவேண்டியது அவசியம். ஜெபத்திற்கு விரோதமாய் வருகிற எல்லா தடைகளையும் தீர்மானத்தோடு நாம் அப்புறப்படுத்தவேண்டியது அவசியம். ஜெப உணர்வையும் சூழ்நிலையையும் நாம் உருவாக்கத் தவறுவோமானால் நாம் வல்லமையாய் ஜெபிக்க இயலாது.
ஒரு மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த விநோதமான ஒரு ஓணானைப் பார்க்க ஏராளமான ஜனங்கள் வந்தார்கள். அந்த ஓணானுக்கு இரண்டு தலைகள் இருந்தன. அதனுடைய வால் இருக்கவேண்டிய இடத்தில் மற்றொரு தலை இருந்தது. இரண்டு பக்கமும் கண்கள் இருந்தன. இரண்டு பக்கமும் வாய் இருந்தது.
விநோதமான அந்த ஓணான் அநேகம்பேரை கவர்ந்து இழுத்தாலும், அதன் நிலைமை பரிதாபமாயிருந்தது. அது ஓட முயலும்போது முன்கால்கள் ஒரு திசையிலும், பின்கால்கள் நேர் எதிர்திசையிலும் இயங்குகிறபடியால் அந்த ஓணானால் நகரக்கூட முடியவில்லை. அநேகர் ஜெபநேரத்தில் இரு தலையுள்ள இந்த ஓணானைப்போல இருக்கிறார்கள். ஒரு பக்கம் அவர்கள் தேவ பிரசன்னத்தை நாடுகிறார்கள். மறுபக்கம் உலகக் கவலைகளினால் நிரம்பியிருக்கிறார்கள்.
சிலருடைய சரீரம், தேவன் பக்கமாய் திரும்பியிருக்கிறது. ஆனால் ஆத்துமாவோ, அன்றைக்கு கவனிக்கவேண்டிய அலுவல்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. ஒருபக்கம் பரிசுத்த உணர்வுகொள்ளுகிறார்கள். மறுபக்கம் பாவம் செய்வதற்கான திட்டத்தினை உருவாக்குகிறார்கள்.
அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதுகிறார், “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” என்று எழுதுகிறார் (யாக். 1:5,6,7,8).
உங்கள் வாழ்க்கையிலே ஜெபம்பண்ண முடியாதபடிக்கு உள்ள தடைகள் என்ன? உங்களுடைய குடும்ப சூழ்நிலைகளினால் வரும் தடைகளா? அல்லது மற்றவர்களினால் உங்களுக்கு ஏற்படுத்தப்படும் தடைகளா? அல்லது இருமனமுள்ளவர்களாய் இருப்பதினால் வரும் தடைகளா? பாவம் செய்து குற்ற மனச்சாட்சி வாதிக்கிறதினால் வரும் தடைகளா?
எந்த தடைகளானாலும் சரி. இன்றைக்கு தீர்மானத்தோடும் வைராக்கியத்தோடும் அந்தத் தடைகளை தகர்த்தெறியுங்கள். நீங்கள் எவ்வளவேனும் சந்தேகப்படாமல் விசவாசத்தோடு கர்த்தரிடத்தில் கேளுங்கள். அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேவபிள்ளைகளே, ஜெப ஜீவியத்திலே முன்னேறுங்கள். தேவ பிரசன்னம் உங்களை சூழ்ந்துகொள்ளட்டும்.
நினைவிற்கு:- “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும், உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே, அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா. 59:2).