No products in the cart.
மே 29 – எப்பொழுதும் ஸ்தோத்திரம்!
“எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச. 5:16,18).
ஒரு வீட்டின்மேலிருந்த கூரையை ஒருவர் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். வாயில் சில ஆணிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் எடுத்து தனது சுத்தியலால் கூரையில் அடித்துக்கொண்டிருந்தவர் திடீரென்று ‘அல்லேலூயா, ஸ்தோத்திரம்’ என்று சத்தமிட்டார்.
கீழே இருந்தவர் என்ன ஆயிற்று என்று கேட்டபோது தான் ஆணிகளில் ஒன்றை விழுங்கிவிட்டதாக அவர் சொன்னார். ‘அதற்காகவா இந்த ஆர்ப்பாட்டம்? ஆணியை விழுங்கியதற்கும் அல்லேலூயாவுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கீழிருந்தவர் கேட்டார். ‘நல்ல வேளை நான் சுத்தியலை விழுங்கவில்லையே. அப்படி விழுங்கியிருந்தால் எவ்வளவு பெரிய ஆபத்து. ஆகவே, தேவனைத் துதிக்கிறேன்’ என்றார் மேலிருந்தவர்.
துதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தை உண்டாக்கியாவது கர்த்தரைத் துதியுங்கள் என்றார் ஒரு பக்தர். தாவீது அப்படித் துதிக்க ஆரம்பித்து ஒரு துதிவீரராகவே மாறிவிட்டார். ஆடு மேய்த்துக்கொண்டு துதித்துக்கொண்டிருந்த அவரை இராஜாவாக்கித் துதிக்கும்படி கர்த்தர் உயர்த்தினார்.
தேவனுடைய ஊழியக்காரர் ஒருவர், கஷ்ட நஷ்ட நேரங்களில் தன் ஜெப அறைக்குப்போய் கதவைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு உற்சாகமாக பாடலைப் பாடி கர்த்தரைத் துதித்து நடனமாடுவாராம்.
“சாத்தான் எனக்கு சிறிய கஷ்டத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால், கர்த்தரோ அந்த சிறிய கஷ்டத்தை பெரிய ஆசீர்வாதமாய் மாற்றப்போகிறார். ஆகவே முன்னதாகவே நான் கர்த்தரைத் துதிக்கிறேன்” என்று அவர் தன் மகிழ்ச்சியின் காரணத்தைச் சொன்னாராம்.
வேதம் சொல்லுகிறது, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).
நீங்கள் தேவனைத் துதிப்பீர்களானால், உங்களுக்கு வருகிற ஒவ்வொரு சோதனையையும் நீங்கள் சாதனையாய் மாற்றிவிடுவீர்கள். தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாய் மாற்றிவிடுவீர்கள். நஷ்டத்தையெல்லாம் பெரும் லாபமாய் மாற்றிவிடுவீர்கள். கர்த்தர் எல்லாவற்றையும் உங்களுக்கு நன்மைக்கு ஏதுவாகவே செய்வார் என்கிற விசுவாசம் உறுதியாய் உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும்.
சாத்தான் எத்தனையோ கஷ்டங்களையும், நஷ்டங்களையும் யோபு பக்தனுக்குக் கொண்டுவந்தான். ஆனால், யோபு முறுமுறுக்கவில்லை. அவர் “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (யோபு 1:21) என்று சொல்லி துதிக்க ஆரம்பித்துவிட்டார்.
தேவபிள்ளைகளே, உங்கள் சோதனையின் முடிவிலே நீங்கள் இரண்டத்தனையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்!
நினைவிற்கு:- “கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக” (2 சாமு. 22:47).