situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 23 – விவேகமும், நம்பிக்கையும்!

“விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான் (நீதி. 16:20).

விவேகிக்கு அறிவு வேண்டும், ஞானம் வேண்டும், புத்திக்கூர்மை வேண்டும். மட்டுமல்ல, பரலோக விவேகமும் வேண்டும். உலகத்திலுள்ள எல்லா ஞானிகளுக்கும் மேன்மையான ஞானியாகிய சாலொமோன் ஞானி, விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான் என்று எழுதினார்.

விவேகமும், கர்த்தர்மேலுள்ள நம்பிக்கையும் இணைந்து போகவேண்டும். கடவுள்மேல் நம்பிக்கையில்லாத எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய விவேகத்தினால் அவர்களுக்கும் பிரயோஜனமில்லை. மற்றவர்களுக்கும் பிரயோஜனமில்லை. ஒருவன் கர்த்தரை நம்பாமல் எத்தனைதான் விவேகமுள்ளவனாயிருந்தாலும், அறிவாற்றல் படைத்தவனாயிருந்தாலும், அவனுடைய முயற்சிகள் பிரயோஜனமற்றதாகத்தான் போகும்.

உண்மையான விவேகம் என்பது அவன் கர்த்தர்பேரில் வைக்கிற நம்பிக்கையிலேயே விளங்கும். விவேகி “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” என்று சொல்லுவான் (சங். 118:8). அப்படியே தன் வாழ்க்கையில் சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் கர்த்தரை நம்பி அவரைச் சார்ந்துகொள்ளுவான். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் வீணாகப்போகாது.

அரசியல்வாதிகள் மிகுந்த செல்வாக்கு உடையவர்கள்தான்; தத்துவ ஞானிகள் அறிவாளிகள்தான்; ஆனால் அவர்களுடைய ஞானம், அறிவு, மூளை, படித்த படிப்பு ஆகிய அனைத்தும் மரித்தபின்பு எங்கே போகும்? மண்ணுக்கும், புழுக்களுக்கும் அல்லவா இரையாகும். கர்த்தரை நம்பாதவன் நித்தியத்தை எங்கே கழிப்பான்?

வேதம் சொல்லுகிறது, “கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்” (சங். 37:3). “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங். 37:5). “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதி. 3:5). “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” (ஏசா. 26:4).

உங்களுடைய நம்பிக்கை எதின்மேல் இருக்கிறது? பணம், படிப்பு, செல்வம், செல்வாக்கு, உறவினர்கள் மற்றும் பிள்ளைகள்மேலா? இவையெல்லாமே உருண்டோடி மறைந்துபோகும். கர்த்தர்மேல் நம்பிக்கையுள்ளவனோ என்றென்றைக்கும் நிலைப்பான்.

சாலொமோனைப் பாருங்கள்! அவருடைய இளமைப்பருவம் கர்த்தரோடு இணைந்திருந்தது. தன் தேசத்தை அரசாள கர்த்தரைமாத்திரம் சார்ந்திருந்தார். அப்படியே, அவர் தேவன்பேரில் நம்பிக்கையுடையவராய் இருந்தபடியினால் தேவன் சாலொமோனுக்கு ஞானத்தையும், அறிவையும், விவேகத்தையும் கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, சாலொமோன் கர்த்தரை நம்பி சார்ந்து ஞானத்தையும், விவேகத்தையும் பெற்றுக்கொண்டதுபோல நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுக்க ஆவலாயிருக்கிறார்.

நினைவிற்கு:- “உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்” (சங். 101:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.