No products in the cart.
மார்ச் 12 – நீதியினிமித்தம்..!
“நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:10).
நீதி என்றால் என்ன? நம்முடைய புண்ணிய கிரியைகளினாலோ, நம்முடைய முயற்சிகளினாலோ, நற்செயல்களினாலோ நீதி ஏற்படுவது இல்லை. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நாம் தேவனோடு ஒப்புரவாகி நீதிமான்களாக்கப்படுகிறோம். அப்பொழுது அவருடைய நீதி நம் இருதயத்திற்குள் வருகிறது.
நாம் தேவனுடைய பிள்ளைகளாக அவருடைய நீதியை சுதந்தரித்துக்கொள்ளும்போது, சாத்தானுடைய கொடூரமான எதிர்ப்பைச் சந்திக்கிறோம். தேவனுக்கு பரம எதிரியாயிருக்கிற அவன் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கும் எதிரியாக மாறுகிறான்.
இன்றைக்கு அநேகம்பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டதினாலே கணவனால் புறக்கணிக்கப்பட்டு, சமுதாயத்தினால் துரத்தப்பட்டு, ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரிலே ஒதுக்கப்பட்டு தத்தளிக்கிறதைப் பார்க்கலாம். ஆனால் கர்த்தரோ அவர்களை அன்போடு நோக்கிப்பார்த்து, அவர்களைப் பாக்கியவான்கள் என்று சொல்லுகிறார்.
இந்த உலகத்தின் பார்வைக்கும், பரலோக இராஜ்யத்தின் பார்வைக்கும் பெரிய வித்தியாசமுண்டு. உலகத்தில் பகட்டாக வாழுகிறவர்கள் பாக்கியவான்கள் என்று கருதப்படுகிறார்கள். ஆனால் பரலோகமோ, ஆவியில் எளிமையுள்ளவர்களையே பாக்கியவான்களாகக் கருதுகிறது. உலகம் சந்தோஷப்படுகிறவர்களை பாக்கியவான்களாய் கருதுகிறது. ஆனால் பரலோகமோ, துயரப்படுகிறவர்களை பாக்கியவான்களாக கருதுகிறது.
அது போலத்தான் நீதியினிமித்தம் நாம் துன்பப்படும்போது அந்த ஜீவியத்தின் மத்தியிலே பரலோகம் நம்மை தம்மோடு இணைத்துக் கொள்ளுகிறது. “நீ பாக்கியவான் என்பதால் கர்த்தருக்காக அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்” என்று சொல்லுகிறது.
அநேகருடைய உள்ளத்தில் லஞ்சம் வாங்குவது ஒரு தவறாகத் தோன்றுவதில்லை. ‘அவர்கள் சந்தோஷமாகக் கொடுக்கிறார்கள். நான் வாங்கிக்கொள்ளுகிறேன். அப்படிச்செய்யாமல் என்னால் குடும்பம் நடத்த முடியாது. வாழ்க்கையின் தேவைகளை சமாளிக்க முடியாது’ என்று சொல்லுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒருவரிடம் ஒரு பக்தன், “கோணலான வழியிலே உன்னை நீ கோணலாக்கிக்கொண்டு இவ்விதமான புரட்டுகளுக்கெல்லாம் கைகொடுத்து வாழ்வதுதான் வாழ்வு என்றால் அந்த வாழ்க்கையே வேண்டாமே” என்றார்.
பழங்காலத்தில் அநேக பரிசுத்தவான்கள் நீதிக்காக வைராக்கியமாக நின்றார்கள். சாட்டையினால் அடித்து சரீரமெல்லாம் கிழிக்கப்பட்டு சிங்கங்களுக்கு இரையாக போடப்பட்டார்கள். கொதிக்கிற எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்டார்கள். கொலை செய்யப்பட ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்.
வேதம் சொல்லுகிறது, “வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறுசிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்” (எபி. 11:35,36,38).
நினைவிற்கு:- “இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க, நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே” (1 தெச. 3:3).