bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

பிப்ரவரி 11 – அறிக்கையிடுவதினால் பிரியம்!

“நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து…” (எஸ்றா 10:11).

தேவ சமுகத்திலே அறிக்கையிடுவது என்பது கர்த்தருக்குப் பிரியமான காரியம் என்று வேதம் சொல்லுகிறது. உங்களுடைய உதடுகளின் பலியாகிய அறிக்கையை கர்த்தர் விரும்புகிறார். உங்கள் வாயிலிருந்து கர்த்தர் எதிர்பார்க்கிற பிரியமான வார்த்தைகள் அறிக்கையாக வெளியே வரவேண்டும் என்பதிலும் ஆவல் கொண்டிருக்கிறார்.

அறிக்கை என்றதும், முதலாவது ஞாபகத்திற்கு வருவது பாவ அறிக்கைதான். நீங்கள் உங்கள் பாவங்களை மூடி மறைத்து இருதயத்தைக் கல்லாக்கி வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. வேதம் சொல்லுகிறது, “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).

நீங்கள் மெய்மனஸ்தாபத்தோடு, “நான் பாவம் செய்து கர்த்தரை துக்கப்படுத்தி விட்டேனே” என்கிற நருங்குண்ட இருதயத்தோடு, உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது கர்த்தர் உங்கள்மேல் பிரியமுள்ளவராயிருக்கிறார். அவருடைய கல்வாரியின் இரத்தத்தை உங்கள்மேல் ஊற்றுகிறார். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:9,7).

இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய ஸ்திரீகளை விவாகம் செய்து, தகாத உறவுகொண்டு பாவம் செய்தபடியினால், அந்த பாவத்தை தேவனாகிய கர்த்தரிடத்திலே அறிக்கையிட்டு அதிலிருந்து விடுபட, அவருக்குப் பிரியமானதைச் செய்ய தங்களுடைய உள்ளத்தை திருப்பினார்கள் என்று எஸ்றா புத்தகத்தில் வாசிக்கிறோம். நீங்களும்கூட, உங்கள் பாவங்களை தேவனிடத்திலே மறைக்காமல் மனஸ்தாபத்தோடு அறிக்கையிடும்போது பாவ பாரம் உங்களைவிட்டு நீங்குவதுடன் தேவனுடைய பிரியம் உங்கள்மேல் வருவதற்கும் அது வழிவகுக்கிறது.

சிலர் பாவ அறிக்கை செய்யாததினால் வியாதி அவர்களைத் தொடர்வதையும், பில்லிசூனியங்கள் பற்றிப் பிடிக்கிறதையும், விடுதலைபெற வழியில்லாமல் அவர்கள் தவிப்பதையும் நாம் காண்கிறோம். யாக்கோபு சொல்லுகிறார், “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக். 5:16).

பாவ அறிக்கை மட்டுமே அறிக்கை என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது. அறிக்கைகளில் இன்னொரு அறிக்கையும் உண்டு. அது விசுவாச அறிக்கை. கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் என்பதை சந்தோஷத்துடன் அறிக்கையிடுவதே அது. நம் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை உங்களுக்கு வரும் பிரச்சினைகளின் மத்தியிலும்கூட சொல்லவேண்டும். “தேவன் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்” என்று அறிக்கையிட வேண்டும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் விசுவாச அறிக்கை செய்யச் செய்ய உங்களுடைய உள்ளான மனுஷனிலே பெலன்கொள்ளுவீர்கள். ஆவியிலே தைரியமுள்ளவர்களாவீர்கள். பரிசுத்தமுள்ளவர்களாயும், வெற்றியுள்ளவர்களாயும் முன்னேறிச் செல்லுவீர்கள். தேவனுடைய பிரியமும் உங்கள்மேல் பூரணமாய் இருக்கும்.

நினைவிற்கு:- “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” (நீதி. 18:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.