No products in the cart.
நவம்பர் 30 – இரண்டு யுத்தக்களங்கள்!
“மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல” (கலா. 5:17,18).
ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் இரண்டு வல்லமைகள் இடைவிடாமல் போராடுகின்றன. ஒன்று, மாம்ச இச்சையின் வல்லமை. அடுத்தது, தேவ ஆவியின் வல்லமை. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை.
தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைக்குள்ளும்கூட இரண்டு வல்லமைகள் போராடுகின்றன. ஒன்று, ஆதாமின் கீழ்ப்படியாமையின் சுபாவம். அடுத்தது, இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் சுபாவங்கள். ஒன்று, தோல்விக்குநேராய் வழிநடத்துகிறது. அடுத்தது, ஜெயத்திற்குநேராய் வழிநடத்துகிறது.
ஆபிரகாமுக்குள்ளாக சந்ததிகள் இரண்டாய்ப் பிரிந்தன. ஒன்று, மாம்சத்துக்குரிய சந்ததி; அடுத்தது, ஆவிக்குரிய சந்ததி. ஒருவன் இஸ்மவேல் என்பவன். அவன் ஆகார் என்னும் அடிமைப்பெண்ணின் புத்திரன். மற்றவனோ, ஈசாக்கு என்பவன். அவன் சாராளுக்கு தேவனுடைய வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் பிறந்த சுயாதீனப் புத்திரன் ஆவான்.
இஸ்மவேல் துஷ்டமனுஷனாய் இருப்பான் என்றும், அவனுடைய கை எல்லாருடைய கைக்கும் விரோதமாய் இருக்கும் என்றும், தேவன் அவன் பிறக்கிறதற்குமுன்னே அறிவித்திருந்தார். ஆனால் வாக்குத்தத்தத்தின் புத்திரனாகிய ஈசாக்கோடு தன்னுடைய உடன்படிக்கையை செய்வதாகவும், அவனால் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் முன்னறிவித்தார்.
ஆபிரகாமின் அந்த இரண்டு குமாரர்களும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் இரண்டு சுபாவங்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று எதிராய் யுத்தம் செய்கின்றன. இவை இரண்டும் வெவ்வேறு பிரமாணங்களாகும்.
அப். பவுல் எழுதுகிறார்: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது” (ரோம. 7:22,23) என்று குறிப்பிடுகிறார்.
இந்த பாவப் பிரமாணத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி? அதற்கான பதிலை ரோமருக்கு எழுதின நிருபத்தில் 8-ம் அதிகாரம் முழுவதிலும் காணலாம். அப். பவுல் சொல்லுகிறார், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோம. 8:2) ஆம், ஆவியின் பிரமாணமே விடுதலையின் பிரமாணம்!
ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு இயேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம் நமக்குத் தேவை. அதுதான் கிறிஸ்துவின் நாமத்தின் வல்லமை. அதுதான் கிறிஸ்துவின் இரத்தம்; அதுதான் பரிசுத்த ஆவியின் அபிஷேகம்! இவை மாம்சத்தை மேற்கொள்ளவும், வெற்றிசிறக்கவும் நமக்கு உதவியாயிருக்கிறது.
தேவபிள்ளைகளே, நீங்கள் மாம்சத்தின் வல்லமையை மேற்கொண்டு, பரிசுத்தமாய் வாழுங்கள். ஜெப ஜீவியம் செய்வதன்மூலம் ஜெய ஜீவியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “குமாரன் (இயேசு) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36).