Appam, Appam - Tamil

நவம்பர் 29 – இடுப்பளவு அனுபவம்!

“பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப் பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது” (எசே. 47:4).

“இடுப்பளவு” என்பது அரையைக் கட்டுவதைக் குறிக்கிறது. பணிவிடைச் செய்வதைக் குறிக்கிறது. தாழ்மையோடு ஊக்கமாய் ஊழியம் செய்வதைக் குறிக்கிறது. உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கிறது என்று இயேசு சொன்னார் (லூக்கா 12:35). பணிவிடைச் செய்வதற்கு எப்போதும் உங்களுடைய அரைகள் கட்டப்பட்டதாக இருக்கட்டும்.

கிராமத்திலுள்ள மீன் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் மீன்களை இரண்டு கூடைகளிலே போட்டுக்கொண்டு இரண்டு கூடைகளுக்கும் குறுக்கே ஒரு கொம்பை இணைத்து, அந்த கொம்பை தங்கள் தோளின்மேல் தூக்கிவைத்து வேகமாய் நடப்பார்கள். 15 மைல் 20 மைல் சுமந்துகொண்டு தூரத்திலுள்ள ஊர்களில் விற்பனை செய்வார்கள். அவர்கள் புறப்படுகிறதற்கு முன்பாக என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு டவலை எடுத்து தங்கள் இடுப்பிலே இறுகக் கட்டிக்கொள்வார்கள். மூச்சைப் பிடித்து தங்கள் தோளின்மேல் அந்த பளுவைத் தூக்கி வைத்துக்கொண்டு மிக வேகமாய் நடப்பார்கள்.

ஏன் அப்படி தங்கள் இடுப்பைக் கட்டிக்கொண்டு நடக்கிறார்கள்? அது மன உறுதியையும், திடமான தீர்மானத்தையும் குறிக்கிறது. இங்கே ஏற்றுகிற அந்த பளுவை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்கிற வரையிலும் என் நடையை, ஓட்டத்தை தளர்த்தவே மாட்டேன் என்கிற உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

அப்போஸ்தலனாகிய, பவுல் ஊழியத்திற்காக தன் அரையைக் கட்டிக்கொண்டுச் செல்கிறார். அவர் சொல்லுகிறார், “ஒன்று செய்கிறேன். பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:13,14).

கர்த்தர் ஊழியம் செய்யும்படி இந்த பூமிக்கு இறங்கி வந்தார். அந்த ஊழியத்திலே நீங்களும் அவரோடு இணைந்து ஆத்துமாக்களை நரகத்தின் பிடியிலிருந்தும், பாவத்தின் வல்லமையிலிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஆகவே கணுக்கால், முழங்கால் அனுபவத்திலிருந்து இடுப்பளவு ஆழத்திற்குள் தீர்மானத்தோடும், பிரதிஷ்டையோடும் இறங்கி வாருங்கள். முழு பெலத்தோடு ஊழியம் செய்ய இன்று உங்களை அர்ப்பணித்து விடுங்கள். இடுப்பளவு தண்ணீர் ஆழத்திற்குள் இறங்கி வரவேண்டுமென்றால் தீர்மானத்தோடு, உங்களுடைய அரையைக் கட்ட வேண்டும். உங்களுடைய மனதின் அரைக் கட்டப்படும்போது சத்தியம் என்னும் கச்சையினால் உங்களுடைய அரை கட்டப்பட்டிருக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார் (எபே. 6:14).

இயேசுகிறிஸ்துவைக் குறித்து உருக்கமான ஒரு சம்பவத்தை யோவான் 13:5-ல் நாம் வாசிக்கலாம். அவர் தன்னுடைய இடுப்பிலே (அரையிலே) ஒரு துண்டைக் (சீலையை) கட்டிக்கொண்டு சீஷர்களுடைய பாதங்களை எல்லாம் கழுவ ஆரம்பித்தார். மகிமையின் ராஜா எவ்வளவாய் தன்னைத் தாழ்த்தி பணிவிடைக்காரனைப்போல் காட்சியளித்தார் என்பதை தியானித்துப் பாருங்கள். தேவபிள்ளைகளே, அந்த தியாகம் உங்களுடைய இருதயத்தை நெருக்கி ஏவட்டும்.

நினைவிற்கு :- “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்” (லூக். 4:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.