No products in the cart.
நவம்பர் 27 – கணுக்கால் அளவு!
“என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார். தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது” (எசே. 47:3).
எசேக்கியேல் 47-ம் அதிகாரம் ஆவிக்குரிய ஆழமான ரகசியங்களை வெளிப்படுத்தும் ஒரு அதிகாரம் ஆகும். இங்கே பரிசுத்த ஆவியானவரை ஒரு நதிக்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறதையும், தேவனுடைய பிள்ளைகள் அந்த நதியாகிய ஆவியானவருக்குள்ளே படிப்படியாக பல ஆழமான அனுபவங்களுக்குள் செல்வதையும் உவமையாய் குறிப்பிடப்பட்டிருக்கிறதைக் காணலாம்.
ஆவியானவர் தருகிற முதல் அனுபவம் கணுக்கால் அனுபவம். கோடை வெயிலில் ஒரு மனிதன் வெப்பமும் உஷ்ணமும் தாள முடியாமல் நடந்து வரும்போது, ஒரு நதியைக் காண்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த உஷ்ணத்தை தணிப்பதற்காக ஓடிப்போய் குளிர்ந்த தண்ணீர் வருகிற நதியிலே தன்னுடைய கால்களை வைப்பான்.
அப்படி வைத்தவுடன், அதுவரையிலும் காலில் இருந்த கொடிய உஷ்ணம் மாறி குளிர்ச்சி ஏற்படுகிறது. கால்வலி எல்லாம் மாறி இளைப்பாறுதல் உண்டாகிறது. மட்டுமல்ல, அந்த தண்ணீர் உள்ளத்திலே பெரிய சந்தோஷத்தையும் மனதிலே பூரிப்பையும் உண்டாக்குகிறது.
எனக்கு ஒரு சகோதரனைத் தெரியும். அவர் வேலை செய்துகொண்டிருந்த நாட்களிலே அவர் வேலை செய்யும் இடத்தின் அருகே ஒரு அழகிய சிறிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அவர் குளிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு எல்லாம் போய்விடுவார். குளிர்காலத்தில் அந்த ஆற்றில் வரும் தண்ணீர் ஐஸ்போல இருக்கும். கால் தாங்கக்கூடாத அளவுக்கு தண்ணீர் குளுமையாக இருக்கும். அவர் அப்படிப்பட்ட நேரத்தில் தண்ணீரில் கால் வைத்த உடனே என்னையும் அறியாமல் அந்நிய பாஷை பேசி மகிழவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும் என்றார்.
ஆவியானவரால் நிரப்பப்படும்போது உங்களுடைய உள்ளமும் சந்தோஷத்தால் மகிழ்ந்து களிகூருகிறது. உலக வாழ்க்கையிலே வந்த சோர்புகள், அசதிகள், துக்கங்கள் எல்லாம் இமைப்பொழுதிலே நீங்கி கர்த்தருக்குள் நீங்கள் ஆனந்தமாய் களிகூருகிறீர்கள். “கணுக்கால் அனுபவம்” என்பது பரிசுத்த ஆவியினால் பெறுகிற சந்தோஷமான அனுபவம் ஆகும்.
சிறுபிள்ளைகள் பெற்றோரோடுகூட, கடற்கரைக்கு உலாவச் செல்வதுண்டு. எல்லா பிள்ளைகளுக்கும் முதல் ஆசை, கடல் தண்ணீரைக் கண்ட உடனே ஓடிப்போய் இரண்டு கால்களையும் தண்ணீரில் நனைக்க வேண்டும் என்பதுதான். அலை வரும்போது கரைக்கு ஓடி பின்பு கடல் நோக்கிச் சென்று கணுக்கால் அளவிலே நின்று விளையாட ஆரம்பிக்கிறார்கள். அப்பொழுது அவர்களுடைய மகிழ்ச்சியை அவர்களுடைய முகத்தில் பார்க்கும்போது பெற்றோருக்கு சந்தோஷமாய் இருக்கும்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறும்போது தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்திலே ஊற்றப்படுகிறது (ரோமர் 5:5). உங்களுக்குள்ளே பெரிய சந்தோஷம் வருகிறது. அந்த பரலோக நதி பரலோக சந்தோஷத்தினால் உங்கள் உள்ளத்தை முழுவதுமாக நிரப்பிவிடுகிறது. தேவபிள்ளைகளே, ஆவிக்குரிய ஆழமான அனுபவத்தை விரும்புங்கள். ஆவியானவரோடுகூட தனிப்பட்ட ஒரு ஐக்கியத்தை கண்டிப்பாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு :- “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்” (யோவான் 7:38,39).