Appam, Appam - Tamil

நவம்பர் 18 – வெறுக்கும் சிந்தை

“வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்” (சங். 119:113).

மனிதனுடைய எல்லா செயல்களும் சிந்தனையில்தான் ஆரம்பிக்கின்றன. சிந்திக்கிறான், பேசுகிறான், பின்பு செயலாற்றுகிறான். சிந்தனை பரிசுத்தமாயிருந்தால், செயல்களும் பரிசுத்தமாயிருக்கும். சிந்தனையில் தெளிவும், ஞானமும் இருந்தால் அவனுடைய வாழ்க்கை இனிதானதாய் அமையும்.

சிந்தனை எங்கே இருந்து வருகிறது? சிலர் மனதிலிருந்து வருகிறது என்றும், சிலர் உள்ளத்திலிருந்து வருகிறது என்றும், சிலர் மூளையின் அறிவிலிருந்து வருகிறது என்றும் சொல்லுகிறார்கள். திட்டமும் தெளிவுமாய், இங்கிருந்துதான் வருகிறது என்று வரையிட்டு யாராலும் சொல்லமுடியாது. ஆனால் இந்த சிந்தனைகள் மனிதனை செயலாற்ற ஏவுகிறது (யோபு 20:2).

ஒருவனுக்கு அவனுடைய சிந்தனையை அடக்கியாளத் தெரியவேண்டும். சிந்தனை மனதின் வேர்போல இருக்கிறது. வேர் நன்றாக இருந்தால்தான் மரம் செழிப்பானதாக இருக்கும். இன்றைக்கு ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திக்கிறதினாலே (சங். 2:1) தீங்கு செய்ய தீவிரிக்கிறார்கள். சிலருக்கு விபச்சாரச் சிந்தனைகள் இருக்கிறதினாலே, கர்த்தரைவிட்டும் ஜீவமார்க்கத்தைவிட்டும் வழி விலகிப்போகிறார்கள் (நீதி. 5:6).

தாவீது ஒரு நாள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். “வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்” என்றார் (சங். 119:113). இங்கே அவருடைய இரண்டு தீர்மானங்களைப் பார்க்கிறோம். வீண் சிந்தனைகளை வெறுப்பது, முதல் தீர்மானம். கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுவது, இரண்டாவது தீர்மானம். வீண் சிந்தனைகளுக்குக் காவலாக கர்த்தரையே வைத்தார். “தேவனே, …. என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தார் (சங். 139:23). இயேசு, பரிசேயர் சதுசேயர் ஆகியோரின் சிந்தனைகளைக்கூட அறிந்தவராயிருந்தார் (மத். 12:25). பேதுரு, தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்தித்தபடியினால் கர்த்தர் அந்த சிந்தனைகளைக் கடிந்துகொண்டார் (மத். 16:23).

தீமையான சிந்தனை வரும்போதெல்லாம் ஆவியானவர் அந்த சிந்தனைகளைத் தடுத்து நிறுத்தி, பரலோக சிந்தனையைக் கொண்டுவருகிறார். வேதம் சொல்லுகிறது, “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை; ….. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” (ரோம. 8:6-9).

வீண் சிந்தனைகளை வெறுப்பதற்கு தாவீது ராஜா கண்டுபிடித்த வழி, வேதத்தின்மேல் பிரியமாய் இருப்பதுதான். வேதத்தை வாசிப்பதும், தியானிப்பதும், வேத வசனங்களின்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும், வீண் சிந்தனைகளை உங்களைவிட்டு அகற்றும். வேத வசனங்களெல்லாம் பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறது. அவை ஆவியும், ஜீவனுமாய் இருக்கிறது. வேத வசனங்களை தியானித்து சிந்திக்கும்போது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).

நினைவிற்கு:- “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலி. 2:4,5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.