No products in the cart.
நவம்பர் 14 – சிந்திக்கும் சிந்தை
“இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்” (ஆகா. 1:5).
கர்த்தர் இஸ்ரவேலரிடம், ‘எகிப்திலிருந்து நான் உங்களை விடுதலையாக்கி, நடத்திக்கொண்டுவந்த பாதைகளையெல்லாம் மறந்துவிடாமல் நினைவில் வைத்திருங்கள்’ என்று சொன்னார். அதுபோல, ‘சீஷரிடமும் என்னுடைய மரணத்தை நினைவுகூரும்படி உங்களுக்காக சிந்தப்பட்ட இரத்தத்தையும், மாம்சத்தையும் திருவிருந்து ஆராதனையைக்கொண்டு அனுசரியுங்கள்’ என்றார்.
தாவீது தன் ஆத்துமாவைப் பார்த்து, “அவர் (கர்த்தர்) செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” (சங். 103:2) என்று பேசினார். “இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்” (சங். 22:3) என்றும் தாவீது சொல்லுகிறார். ஆகவே கர்த்தர் செய்த எல்லா நன்மைகளையும், கொடுத்த எல்லா ஆசீர்வாதங்களையும் நினைவுகூர்ந்து துதிப்பதும், ஸ்தோத்திரிப்பதும் நமக்கு ஏற்றதாயிருக்கிறது.
அதேநேரம், உலகத்தின் முடிவையும், கர்த்தருடைய வருகையையும் நினைத்துப்பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நீங்கள் ஓடுகிற கிறிஸ்தவ ஓட்டத்தில் சரியாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்களா? ஓட்டத்தின் முடிவில் நீதியின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்வீர்களா? கர்த்தர் எதிர்பார்க்கிற பரிசுத்தமும், நீதியும், ஜெபஜீவியமும் உங்களுடைய வாழ்க்கையிலே இருக்கின்றனவா? அல்லது குற்ற மனசாட்சியினால் வாதிக்கப்பட்டு, நம்பிக்கையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறீர்களா?
பிலேயாம் என்ற புறஜாதி தீர்க்கதரிசி, “நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக; என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்” (எண். 23:10). அவன் அப்படி விரும்பினபோதிலும், தன் வாழ்க்கையை சீர்ப்படுத்தி, கர்த்தருக்குப் பிரியமானவனாக வாழாமல், பொருளாசை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தான்.
இஸ்ரவேலர் பாவத்தில் விழத்தக்கதான ஆசையை பாலாக் என்ற மோவாபிய ராஜாவுக்கு இரகசியமாய்க் கூறினான். ஆகவே அவனுடைய முடிவு வெற்றியானதாக, மகிமையானதாக இருக்கவில்லை. அவன் எதிரிகளின் பட்டயத்தால் வெட்டுண்டு மரித்தான். நீங்கள் நீதிமான்களாக வாழ்ந்தால்தான் நீதிமான்களாக மரிக்கமுடியும். உங்கள் வாழ்க்கை நீதிமானாகிய கிறிஸ்துவினுடையதுபோல இருக்கிறதா என்பதை ஆராய்ந்துபாருங்கள்.
வேதம் சொல்லுகிறது, “வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்” (உபா. 11:12). கர்த்தர் எப்போதும் உங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறார் என்பதையும், உங்கள்மேல் கவனமாயிருக்கிறார் என்பதையும், அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பக்தனாகிய யோபுவைப் பார்த்து அவருடைய சிநேகிதனாகிய பல்தாத் சொன்னார், “உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்” (யோபு 8:7).
தேவபிள்ளைகளே, வருடத்தின் ஆரம்பத்தை விட முடிவு மகிமையாயிருக்க வேண்டும். “நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது” (நீதி. 23:18) என்றும், “ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது” (பிர. 7:8) என்றும் வேதம் சொல்லுகிறது.
நினைவிற்கு:- “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்” (மத். 24:13,14).