Appam, Appam - Tamil

நவம்பர் 12 – ஜெபத்தின் சிந்தை

“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:6,7).

நாம் ஊக்கமான ஜெப ஜீவியத்தின் மூலமாகவும், ஆழமான விசுவாசம் கொண்டவர்களாய் கர்த்தர்மேல் உள்ளத்தின் பாரத்தை இறக்கி வைப்பதின் மூலமாகவும், தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

“ஜெப ஜீவியம்” என்பது, சமாதானப் பிரபுவோடு நெருங்கிக் கிட்டிச் சேருகின்ற ஒரு செயலாகும். கிறிஸ்துவினிடத்தில் ஜெபித்து, எல்லாரோடும் சமாதானமாகும் வழியையும் அறிந்துகொள்ளவேண்டும். ஜெபிக்கிற சிலாக்கியத்தையும், ஜெப ஆவியையும் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறபடியால், நீங்கள் எல்லா பிரச்சனைகளையும், கவலைகளையும் கர்த்தருக்குத் தெரிவித்துவிட்டு அவரது வார்த்தைக்காகக் காத்திருங்கள்.

அன்னாளுக்குப் பிள்ளையில்லாதபடியால் குடும்பத்திலே சமாதானத்தை இழந்தாள். சந்தோஷத்தை இழந்தாள். அவளுடைய சக்களத்தி நாள்தோறும் அவளைப் புண்படுத்திப் பேசிக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் ஜெபத்திலே தன் இருதயத்தை தேவ சமுகத்தில் ஊற்றிவிடும்படி தீர்மானித்தாள் (1 சாமு. 1:15). அப்படி அவள் தன் இருதயத்தை ஊற்றிவிட்டபிறகு மீண்டும் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. ஆலயத்திலே ஊழியம் செய்த ஆசாரியனாகிய ஏலி, “மகளே, நீ சமாதானத்தோடேபோ” என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.

வேதம் சொல்லுகிறது, “நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்” (யோபு 22:21). நண்பர்கள் ஒருவரோடொருவர் மனம்விட்டுப் பேசும்போதே சமாதானம் ஏற்படுகிறதென்றால், தேவகுமாரனுடன் ஜெபத்திலே பேசி உறவாடும்போது, எத்தனை அதிகமான சமாதானம் உங்கள் உள்ளத்தை நிரப்பும்! ஜெபம் தேவசமாதானத்தை உங்களுக்குள் கொண்டுவருகிறது. ஜெபிக்கிற மனுஷன்தான் பூரண சமாதானத்தோடு விளங்குவான். இன்றைக்கு “நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” (ரோம. 15:13).

சமாதானத்துக்கானாலும் சரி, அல்லது வேறு எந்தக் காரியங்களுக்கானாலும் சரி, கர்த்தரிடத்தில் செல்லும்போது முறுமுறுத்துக்கொண்டு செல்லாதிருங்கள். உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

‘ஸ்தோத்திரம்’ சொல்லுவது என்பது, இதுவரை உங்களுக்குக் கர்த்தர் செய்த நன்மைகளுக்காக நன்றி செலுத்துவதாகும். தேவனே, நீர் ஜெபத்தைக் கேட்கிறவர். ஜெபத்துக்குப் பதிலளிக்கிறவர் என்று சொல்லி அவரைப் போற்றிப் புகழ்ந்து ஸ்தோத்திரியுங்கள்.

நீங்கள் ஜெபிக்கும்படி கர்த்தர் விண்ணப்பத்தின் ஆவியினாலும், மன்றாட்டின் ஆவியினாலும் உங்களை நிரப்புவாராக. அப்பொழுது கர்த்தருடைய பாதத்தில் பணிந்து உங்களுடைய விண்ணப்பங்களைத் தாழ்மையோடு ஏறெடுக்கமுடியும். ஒருநாளும் கர்த்தர் உங்களுடைய கண்ணீரின் ஜெபத்தை புறக்கணிக்கவே மாட்டார். மனதுருகி, அருகில் வந்து, ஒரு தாய் தேற்றுவதுபோல தேற்றி, சமாதானத்தைத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு; அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங். 55:22).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.