No products in the cart.
நவம்பர் 03 – ஆராயும் சிந்தை
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங். 139:23).
“நான் என்னை ஆராய்ந்தது போதாது. ஆண்டவரே, நீரே என்னை ஆராய்ந்து பாரும், என்னுடைய பார்வையிலே என்னுடைய தவறுகள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உம்முடைய பார்வையில் அவைகள் மறைவானவைகள் அல்லவே. நீர் காண்கிறபடி நான் காணும்படி எனக்கு என்னைக் காண்பித்தருளும்” என்று தாவீது ஜெபிக்கிறதை இந்த வேத பகுதியில் நாம் பார்க்கிறோம்.
இருதயத்தையும், மனதின் சிந்தனைகளையும் ஆராய்ந்தறிந்திருந்தால்தான் வேதனைகளை உண்டாக்கும் வழிகளை நீக்க முடியும். கர்த்தரைப் பிரியப்படுத்தமுடியும். நித்திய வாழ்க்கையிலே உற்சாகமாய்ச் செல்ல முடியும். இந்த நாளில் இதுபற்றிய சில சிந்தனைகளைக் குறித்து நாம் தியானிப்போமாக!
1. அக்கிரமமான சிந்தை:- “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங். 66:18). அக்கிரமசிந்தை என்பது, கிரமத்திற்கு மிஞ்சியதும், ஒழுங்குகளுக்கு அப்பாற்பட்டதுமான ஒன்றாகும். இது தேவனுக்குப் பிரியம் இல்லாதது. “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று இயேசு சொல்வதைக் கவனியுங்கள் (மத். 7:23). அக்கிரம சிந்தனைகளை உங்களைவிட்டு அகற்றுவீர்களாக.
2. மாம்சமான சிந்தை:- “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (ரோம. 8:5). மாம்சத்திற்குரிய சிந்தை என்றால் என்ன? ஆவியானவருக்கு இடம் கொடாமல், தன் சுய சித்தத்தின்படி மனதும், மாம்சமும் விரும்புவதைச் செய்வதே மாம்சத்தின் கிரியையாக இருக்கிறது. அப். பவுல், கொரிந்தியருக்கு எழுதின நிரூபத்தில் “பொறாமையும், வாக்குவாதமும், பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?” என்று குறிப்பிடுகிறார் (1 கொரி. 3:3). மாம்ச சிந்தையை உங்களைவிட்டு அகற்றுவீர்களாக.
3. மேட்டிமையான சிந்தை:- “மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்” (ரோம. 12:16). தேவன் அருவருக்கிற இன்னுமொரு பாவம் மன மேட்டிமையாகும். பெருமை உள்ளவர்களை தேவன் எதிர்த்து நிற்கிறார். எல்லா பாவங்களைப் பார்க்கிலும் கொடிய பாவம் ஒன்று உண்டு என்றால், அது அகங்காரமும் பெருமையுமாகிய பாவம்தான். கர்த்தர் அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்த்து நிற்கிறவரானபடியினால், உங்கள் வாழ்க்கையில் மேட்டிமையான சிந்தனைகளை அறவே விலக்கிவிடுங்கள்
4. வீணான சிந்தனை:- “மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனிமேல் நடவாமலிருங்கள்” (எபே. 4:17). வீணான சிந்தை என்று சொல்லும்போது, அது உபயோகமற்ற சிந்தையைக் குறிக்கிறது. அது மனக்கோட்டைகளையும், நிறைவேற்றமுடியாத எண்ணங்களையும், கேடு உண்டாக்கி கறைப்படுத்தும் சிந்தனைகளையும் குறிக்கிறது.
ஆம், அநேகர் இப்படிப்பட்ட வீணான மற்றும் தீய சிந்தனைகளுக்கு இடம்கொடுத்து உபயோகமற்றவர்களாக மாறிப்போகிறார்கள். தேவபிள்ளைகளே, மேற்கண்ட சிந்தனைகளையெல்லாம் உங்கள் மனதைவிட்டு நீக்கி, தேவ சிந்தைக்கு உங்கள் இருதயத்தில் இடம் கொடுப்பீர்களாக!
நினைவிற்கு:- “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோம. 12:2).