No products in the cart.
டிசம்பர் 22 – அதிசயமானவர்!
“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்ளையும் அவர் செய்கிறார்” (யோபு 5:9).
நீங்கள் சாதாரணமானவர்கள்தான்! ஆனால் உங்களில் வாசம் பண்ணுகிற கர்த்தரோ அசாதாரணமானவர், அற்புதங்களைச் செய்கிறவர், அதிசயமானவர்!
கர்த்தர் ஏன் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்கிறார்? அவர் மனதுருக்கம் நிறைந்தவராக இருக்கிறதினால் அற்புதங்களைச் செய்கிறார். அவருடைய அன்பும், பாசமும், இரக்கமும், தயவும், மனதுருக்கமும் உங்களுடைய வாழ்க்கையிலே அற்புதங்களைக் கொண்டுவருகிறது. அதைக் குறித்து யோபு பக்தன் ஆச்சரியப்பட்டு, அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார் என்று சொல்லி மனம் பூரித்தார். தேவனை துதித்தார்.
இரண்டாவதாக, கர்த்தர் ஏன் அதிசயங்களைச் செய்கிறார்? ஏனென்றால், அவர் பெயரே அதிசயமானவர் என்பதாகும் (ஏசா. 9:6). அவருடைய பெயரே அதிசயமானவர் என்பதால் அவருடைய வாழ்க்கையெல்லாம் அதிசயம். அவர் செய்யும் கிரியைகள் எல்லாமே அதிசயம்தான்.
அவர் செய்த அதிசயங்களை வேதத்திலிருந்து தியானித்துப்பாருங்கள். ‘வெளிச்சம் உண்டாகக்கடவது’ என்று சொன்னார், அதிசயமாய் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தோன்றிற்று. ‘இரையாதே, அமைதலாயிரு’ என்று சொன்னார், ஆச்சரியமாய் கடலும், காற்றும் அவருக்குக் கீழ்ப்படிந்து அமைதல் உண்டாயிற்று. ‘இவனை விட்டு புறப்பட்டு போ’ என்று அசுத்த ஆவிக்கு கட்டளையிட்டார், உடனே அசுத்த ஆவி விலகி ஓடிற்று. அவருடைய வாயின் வார்த்தைகள் எல்லாம் அதிசயங்கள்! கரத்தின் கிரியைகள் எல்லாம் அதிசயங்கள்! நிச்சயமாகவே அவர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்வார்!
அவர் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கிறவர். நாறிக் கிடந்த லாசருவின் உடலை உயிரோடு எழுந்துவரப்பண்ணினவர். கடலின்மேல் நடந்து சென்றவர். ஐந்து அப்பத்தைக் கொண்டு ஐயாயிரம்பேரைப் போஷித்தவர். அவர் அதிசயங்களைச் செய்கிறவர்! கர்த்தர் சொல்லுகிறார், “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்ததர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரே. 32:27). தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக்கா 1:37).
ஒருவேளை இன்று கர்த்தர் என்னுடைய வாழ்க்கையிலே ஒரு அற்புதத்தை செய்யமாட்டாரா என்றும், எனக்கு உதவி செய்து ஆற்றித் தேற்ற மாட்டாரா என்றும் நீங்கள் ஏக்கத்தோடு இருக்கலாம். அற்புதங்களைச் செய்கிற தேவனை நோக்கிப்பாருங்கள். ‘தேவனே, நீர் அதிசயமானவர்’ என்று போற்றிப் புகழ்ந்து துதியுங்கள். நிச்சயமாகவே அவர் உங்கள் வாழ்க்கையிலே அற்புதத்தைச் செய்வார். “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்” (சங். 113:7).
வேதத்திலே தேவன் செய்த ஒவ்வொரு அற்புதத்துக்காகவும் அவரைத் துதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கானா ஊர் கலியாணத்திலே திராட்சரசம் குறைவுபட்டபோது தண்ணீரை திராட்சரசமாக்கி அற்புதம் செய்யவில்லையா? தண்ணீர் போன்ற சாதாரணமானவர்களை திராட்சரசம் போன்ற பரிசுத்தவான்களாய் மாற்றவில்லையா? தேவபிள்ளைகளே, கர்த்தர் அதிசயமானவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்” (எரே. 31:25).