Appam, Appam - Tamil

டிசம்பர் 08 – எதிரிகளிலும் பெரியவர்!

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14).

கர்த்தர் உங்களுடைய எல்லா சத்துருக்களைப் பார்க்கிலும் பெரியவர். எல்லா எதிரிகளைப் பார்க்கிலும் பெரியவர். எல்லாப் போராட்டங்களைப் பார்க்கிலும் பெரியவர்! அவர்தான் உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறவர். வெற்றியை உங்களுக்குத் தருகிறவர். யுத்த நாட்களில் தேச தலைவர்கள் போரில் வலிமையுள்ள தளபதியை தெரிந்தெடுப்பார்கள். அவன் ஞானமும் சம்பிரவாதியும், வல்லமையுள்ளவனுமாக விளங்குவான். அப்படிப்பட்டவனை நம்பிதான் தலைவர்கள் தேச பொறுப்பை பகிர்ந்துகொள்ளுவார்கள்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது இங்கிலாந்து தேசத்திலுள்ளவர்கள் பிரதமராக சர்ச்சிலைத் தெரிந்தெடுத்தார்கள். அவர் இருந்தால்தான் இரும்பு மனிதராக இங்கிலாந்து தேசத்தை வெற்றியின் பாதையில் நடத்திச்செல்வார் என்பது அவர்களுடைய கணிப்பு. அப்படியே சர்ச்சில் இங்கிலாந்து தேசத்தை வெற்றியில் நடத்தினார். இரண்டாவது உலக மகா யுத்தத்தில் இங்கிலாந்து தேசத்திற்கும் அதைச்சார்ந்த நாடுகளுக்கும் வெற்றி கிடைத்தது.

இஸ்ரவேல் தேசம் சுதந்தரம் பெற்றபோது, அதைச் சுற்றிலுமுள்ள பல நாடுகள் இடைவிடாமல் தொடர்ந்து போர் தொடுத்துக்கொண்டேயிருந்தன. எகிப்தின் அதிபதியான நாசர் தலைமையில் எல்லா அரபு தேசங்களும் யுத்தத்திற்கு ஒன்றாகத் திரண்டுவந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் “மோசே தயான்” என்ற தளபதியை தெரிந்தெடுத்தார்கள். அவர் யுத்தத்தில் கூரிய ஞானமுடையவராயிருந்து, கர்த்தர் கொடுத்த ஞானத்தினால் எதிரிகளின் படைகளைச் சிதறடித்தார். ஏழு நாட்கள் நடைபெற்ற யுத்தத்திற்குள்ளாகவே இஸ்ரவேல் ஜெயம் கொண்டதோடல்லாமல் பகைவர்களுடைய எல்லைகளையும் எட்டிப் பிடித்தது.

இன்று உங்களுக்கு விரோதமாக பல யுத்தங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. பொல்லாத மனுஷருடைய சதி ஆலோசனைகளை நீங்கள் எதிர்த்து நிற்கவேண்டியிருக்கிறது. வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போரிட வேண்டியதிருக்கிறது. வெளிக்குத் தெரியாத பல வகையான இச்சைகளும், உணர்வுகளும் மாம்சத்தில் போராடிக்கொண்டிருக்கின்றன. உங்களுடைய யுத்தத்தில் யாரை சேனாதிபதியாக தெரிந்தெடுக்கப்போகிறீர்கள்?

அன்று மோசே கர்த்தரையே தனது சேனாதிபதியாக தெரிந்தெடுத்தார். பார்வோனின் சேனைகள் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து செங்கடலின் அருகே நெருங்கியபோது இஸ்ரவேலர் எல்லாரும் பயந்து நடுங்கினார்கள். மோசே அவர்களைத் திடப்படுத்தி, “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்” என்று சொன்னார். அது இஸ்ரவேலருக்கு பெரிய ஆறுதலாயிருந்திருக்கும்! அவர்களது கலக்கமும் அதைரியமும் மறைந்தன. அவர்கள் பெலன் கொண்டார்கள். அவர்கள் நம்பினபடியே கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்தார். பார்வோனும், அவனுடைய சேனைகளும் சிவந்த சமுத்திரத்தில் தள்ளப்பட்டார்கள். எகிப்தின் யுத்த வீரர்களும், இரதங்களும், குதிரைகளும் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து மரிக்க வேண்டியதாயிற்று. கர்த்தர் ஜெயத்தின்மேல் ஜெயத்தைக் கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, இஸ்ரவேலின் ஜெயக்கெம்பீரமானவர் உங்களோடுகூட இருக்கிறார்.  அவர் உங்களுடைய யுத்த சேனாதிபதியாக இருக்கிறார். அவரையே சார்ந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:11).

 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.