Appam, Appam - Tamil

டிசம்பர் 07 – ராஜாவிலும் பெரியவர்!

“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” (தானி. 3:17).

அன்று உலகத்திலிருந்த எல்லா சாம்ராஜ்யங்களுக்குள்ளும் பாபிலோன் சாம்ராஜ்யம் மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்தது. அதை நேபுகாத்நேச்சார் ஆண்டுவந்தார். அவரை எதிர்த்து நிற்கவோ, அவருடைய வார்த்தைகளுக்கு எதிர்த்து பேசவோ ஒருவருக்கும் தைரியம் இருந்ததில்லை.

ஆனால், சிறையிருப்பில் பிடிக்கப்பட்டு, இஸ்ரவேலிலிருந்து பாபிலோனுக்கு கொண்டுவரப்பட்ட மூன்று வாலிபர்களுக்கு அந்த தைரியம் இருந்தது. அவர்கள்தான் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள்.

இராஜா அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப்பண்ணுவித்து, எல்லா மக்களும் அந்த பொற்சிலையை விழுந்து வணங்கவேண்டுமென்று கட்டளை பிறப்பித்தான். பாபிலோன் சாம்ராஜ்யத்திலுள்ள அத்தனை மக்களும் ஒரு வார்த்தையும் எதிர்த்துப்பேசாமல் அந்த சிலையின்முன் விழுந்து வணங்கினார்கள்.

ஆனால், அந்த மூன்று எபிரெய வாலிபர்களுடைய கண்களில் கர்த்தர் பெரியவர் என்கிற தரிசனம் இருந்தது. பாபிலோன் ராஜாவிலும் தங்கள் தேவன் பெரியராய், இராஜாதி இராஜாவாயிருக்கிறார் என்கிற உறுதி இருந்தது.

ஆகவேதான் அவர்கள் இராஜாவைப் பார்த்து மிகுந்த தைரியத்துடன் “நேபுகாத்நேச்சாரே, இந்த காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” என்றார்கள் (தானி. 3:16, 17). அப்படியே கர்த்தர் அவர்களை விடுவித்தார்; பாதுகாத்தார்.

நீங்கள் இன்றைக்கு எந்தச் சூழ்நிலையின் வழியாக கடந்துசென்றாலும், இராஜாதி இராஜா உங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். உங்களுடைய கால்களுக்கு விரிக்கப்பட்ட எல்லாக் கண்ணிகளிலிருந்தும் கர்த்தர் உங்களை தப்புவிப்பார். என் குடும்பத்திற்கு அவமானமாகி விடுமோ, நான் ஞானமில்லாமல் இந்த பிரச்சனையில் சிக்கிக்கொண்டேனோ என்றுசொல்லி நீங்கள் பயப்படுகிற ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தர் உங்களோடிருந்து, உங்களைத் தப்புவிப்பார்.

பல தீய மனிதர் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்களே, அநேகம்பேர் ஒன்றாய் கூடியிருக்கிறார்களே, என் பக்கம் ஒருவரும் இல்லையா என்று நீங்கள் அங்கலாய்க்கலாம். ஆனால், இயேசுவின் நாமத்தில் சொல்லுகிறேன், நீங்கள் ஆராதிக்கிற தேவன் உங்களைத் தப்புவிப்பார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்கு விரோதமாய் சட்டமும், சமுதாயமும் இருக்கலாம். நண்பர்களும், உறவினர்களும் எதிராயிருக்கலாம். கலங்காதேயுங்கள். “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்” (ஏசா 41:10) என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் இராஜாதி இராஜாவினுடைய பிள்ளைகள், நீங்கள் கர்த்தரை தஞ்சமாய்க்கொண்டிருக்கிறவர்கள். நிச்சயமாய் அவர் உங்களைத் தப்புவிப்பார். பயப்படாதேயுங்கள்!

நினைவிற்கு:- “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து அவனைக் கனப்படுத்துவேன்” (சங். 91:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.