No products in the cart.
டிசம்பர் 04 – சாலொமோனிலும் பெரியவர்!
“காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; …சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 6:28,29).
வேதத்திலுள்ள ராஜாக்களில் சாலொமோன் மூன்று காரியங்களில் பெரியவராயிருந்தார். முதலாவது, ஞானத்தில் பெரியவராயிருந்தார். இரண்டாவது, மகிமையில் பெரியவராயிருந்தார். மூன்றாவது, ஆளுகையில் பெரியவராயிருந்தார். ஆனால் நம் கர்த்தரோ, சாலொமோனிலும் பெரியவர் என்று வேதம் சொல்லுகிறது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தபோது சாலோமோனின் மகிமையை காட்டுப் புஷ்பங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். சாலொமோன் தன்னைத்தானே உடுத்திக்கொண்டார். அந்த வஸ்திரங்கள் ராஜவஸ்திரங்களும், மகிமையான வஸ்திரங்களுமானவை. ஆனால் கர்த்தரோ காட்டுப் புஷ்பங்களை உடுத்துவிக்கிறவர். புல்லைக்கூட உடுத்துவிக்கிறவர். இவையெல்லாம் எத்தனை அழகான நிறங்களைக் கொண்டதாக இருக்கின்றன!
அந்த மலர்கள் எத்தனை அருமையாய் வாசனை வீசுகின்றன! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கண்களைக் கவர்ந்து இழுக்கிறது. சாலோமோனிலும் பெரியவர் காட்டுப் புஷ்பங்களை எவ்வளவு அழகாய் உடுத்துவிக்கிறார்! சாலொமோன் தன் சர்வ மகிமையிலும் அவைகளைப்போல உடுத்தியிருந்ததில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சாலொமோனிலும் பெரியவர், காட்டுப் புஷ்பங்களையே அவ்வளவு அழகாக உடுத்துவித்திருக்கிறார் என்றால், அவருடைய பிள்ளைகளாகிய உங்களை எவ்வளவு அருமையாய் உடுத்துவிப்பார்! அந்த மகிமையான வஸ்திரங்களை வார்த்தையினால் வர்ணிக்கவே முடியாது.
சாலொமோன் உடுத்தியிருந்த வஸ்திரங்கள் எவ்வளவு மகிமையாய் இருந்தாலும் பழையதாகிப் போய்விடக்கூடும். அழுக்கடைந்துவிடக்கூடும். பூச்சிகளும், புழுக்களும் அரித்துவிடக்கூடும். ஆனால் கர்த்தர் உடுத்துவிக்கிற இரட்சிப்பின் வஸ்திரங்களையும், நீதியின் சால்வையையும் புழுக்களும் பூச்சிகளும் அரிக்கவே முடியாது. அவர் மகிமையான ஆவிக்குரிய வஸ்திரங்களை என்றென்றைக்கும் உங்களுக்குத் தந்தருளுகிறாரே!
ஞானத்திலும் நம்முடைய தேவன் பெரியவர். சாலொமோனின் ஞானம் அன்றைக்கிருந்த ஜனங்களுக்கு பெரிய ஆச்சரியமாயிருந்தது. வேதம் சொல்லுகிறது: “சாலோமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.” (1 இராஜா. 4:34).
கர்த்தர் சாலொமோனுக்கு அளவற்ற ஞானத்தைக்கொடுத்திருந்தாலும் அந்த ஞானியோ, ஞானத்தை ஆவிக்குரிய பிரகாரமாய் செலவளிக்கவில்லை. அநேகரை மனைவிகளாகச் சேர்த்துக்கொண்டு ஒவ்வொருவருக்காகவும் விக்கிரகத் தோப்புகளை உண்டாக்கினார். அவரது ஞானம் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறதாய் இருக்கவில்லை.
தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். சாலொமோனிலும் பெரியவரான கர்த்தரிடத்தில் நீங்கள் ஞானத்தைக் கேட்கும்போது அவர் நிச்சயமாகவே உங்களுக்கு ஞானத்தைத் தந்தருளுவார்.
நினைவிற்கு:- “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் (1 கொரி. 1:31).