No products in the cart.
ஜூலை 5 – ஐந்து மடங்கு!
“எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது” (ஆதி. 43:34).
ஐந்து மடங்கு அதிகமான ஆசீர்வாதத்தைக்குறித்துப் பார்ப்போம். யோசேப்பு தன் சகோதரர்கள் எல்லாருக்கும் உணவுவகைளை பங்கிட்டு அனுப்பினபோது, பென்யமீனுக்குமட்டும் ஐந்து மடங்கு அதிகமாகக் கொடுத்தார். ஏன்? பென்யமீனும், யோசேப்பும் ஒரே தாயின் பிள்ளைகள். ஆகவே பென்யமீனை எண்ணியபோது யோசேப்பின் உள்ளம் உருகிவிட்டது.
மற்ற சகோதரர்கள் பென்யமீனுடைய பங்கைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கக்கூடும். எல்லாவற்றுக்கும்மேலாக பென்யமீனே தனக்கு ஏன் இவ்வளவு விசேஷமான பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் திகைத்திருக்கவேண்டும். தேவபிள்ளைகளே, உலகத்தாரைப் பார்க்கிலும் நமக்கு விசேஷமான பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், கர்த்தரே நம்முடைய பங்கானவர்.
“கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங். 16:5,6).
கர்த்தரைத் தஞ்சமாய்க்கொண்டிருக்கிற ஜனங்களை நிச்சயமாகவே அவர் ஆசீர்வதிக்கிறார். சிலருக்குப் பத்துமடங்கு பங்கைத் தருகிறார். விதைக்கிறவன் உவமையில் விதைத்த அந்த விதைகள் முப்பது மடங்கும், அறுபது மடங்கும், நூறு மடங்குமாக பலன் கொடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. நூறு மடங்கு அறுவடை செய்துகொண்டுபோவது எத்தனை சந்தோஷமான காரியம்!
ஈசாக்கு தன் வாழ்க்கையிலே கர்த்தரையே தன்னுடைய பங்காகத் தெரிந்துகொண்டார். கர்த்தர் ஈசாக்கை எப்படி ஆசீர்வதித்தார் தெரியுமா? வேதம் சொல்லுகிறது, “ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்” (ஆதி. 26:12).
நூறுமடங்கு பலனோடு இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க மோசே விரும்பவில்லை. இன்னும் அதிகமாக இம்மைக்குரிய ஆசீர்வாதங்களினாலும், நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களினாலும் தேவ ஜனங்களை ஆசீர்வதிக்க அவர் விரும்பினார். “நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக” (உபா. 1:11) என்று சொன்னார்.
ஆனால் கர்த்தரோ, இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கத் தீர்மானித்தார். ஆயிரம் மடங்குக்கு மேலான மடங்கு என்ன என்பதை அவர் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை. வானத்தின் பலகணிகளைத் திறந்துவிட சித்தங்கொண்டார். கர்த்தர் சொல்லுகிறார், “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்” (மல். 3:10).
உண்மையாகவே கர்த்தரைத் தஞ்சமாய்த்கொண்டிருக்கிற மக்கள் பாக்கியவான்கள். அவருடைய அன்பை ருசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவருடைய வழியிலே உத்தமமாய் நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவரைப் பங்காகவும், சுதந்திரமாகவும் பெற்றிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கிற இந்த ஆசீர்வாதமான பங்கையும், பாக்கியங்களையும் பெற்றுக்கொள்வீர்களா?
நினைவிற்கு:- “கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா. 28:8).